கேரளாவில் ஒன்றரை வயது குழந்தை ஓடும் காரிலிருந்து தவறி விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பழனி கோயிலுக்கு சென்று விட்டு சொந்த ஊருக்கு ஜீப் காரில் குழந்தையின் குடும்பம் திரும்பிக் கொண்டிருந்தது.
இடுக்கி மலைப்பாதையில் கார் செல்லும்போது, தாயின் மடியில் அமர்ந்திருந்த அந்த குழந்தை, வளைவில் திரும்பும் போது காரிலிருந்து தவறி சாலையில் விழுந்துள்ளது. இதனை காரில் இருந்த யாரும் கவனிக்கவில்லை. குழந்தையின் தாய் தூங்கிக் கொண்டிருந்ததால் அவரும் அதை உணரவில்லை.
ரோட்டில் தவறி விழுந்த குழந்தை ரோட்டின் மறுமுனைக்கு தவழ்ந்து சென்றது. நல்வாய்ப்பாக அந்நேரத்தில் வாகனங்கள் ஏதும் அவ்வழியே வரவில்லை. பின்னர், அருகில் இருந்த சோதனைச்சாவடிக்கு அருகே தவழ்ந்தபடி சென்றிருக்கிறது அந்த குழந்தை. அங்கிருந்த அதிகாரி ஒருவர் ஏதோ தவழ்ந்து வருவது போல உள்ளது என அருகில் சென்று பார்த்துள்ளார். அப்போது அது குழந்தை என தெரியவந்ததை அடுத்து மேலதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் அனைத்தும் சி.சி.டி.வியில் பதிவாகியுள்ளது.
சிறு காயங்களுடன் மீட்கப்பட்ட குழந்தை, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதேநேரத்தில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது.
குழந்தை விழுந்தது தெரியாமல் வீடு சென்று சேர்ந்த அந்த குடும்பம், குழந்தை இல்லாததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனையடுத்து அந்த குடும்பத்தினர் வெல்லத்தூவல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அங்கு ஏற்கனவே ராஜமலாவில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை குறித்து காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து அங்குள்ள காவல் அதிகாரிகளுக்கு தொடர்பு கொண்டு இது குறித்து தகவல் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அந்த குழந்தை அதன் பெற்றோர்களிடம் ஓப்படைக்கப்பட்டது. சாலையில் விழுந்த குழந்தை தவழ்ந்து செல்லும் சி.சி.டி.வி காட்சிகள், சமூக வலைதளங்களில் தற்போது வைரலாக பரவி வருகிறது.