
தமிழ்நாட்டில் பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிகப்படியான இடங்களை த.வெ.க வென்றும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் தவித்து வந்தது.
பெரும்பான்மையை நிரூபிக்க முடியாவிட்டால் ஆளுநர் வழி குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்து, தமிழ்நாட்டை ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்கொள்ள நேரிடும் என்ற அச்சுறுத்தலின் பேரில், தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுடன் கலந்துபேசிய பிறகு, வெளியில் இருந்து த.வெ.க.விற்கு ஆதரவு தருவதாக மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வி.சி.க மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் அறிவித்தன.
த.வெ.க தலைவர் என்கிற முறையில் மே 10 அன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், முதலமைச்சராக பதவியெற்றுக் கொண்டார் விஜய்.
அதன்பிறகு, சுமார் ஒருவார காலம் துறைகள் அறிவிக்கப்படாமல் 9 அமைச்சர்கள் பதவியேற்ற நிலையோடு இயங்கி வந்தனர். இந்நிலையில், நேற்று (மே 16) அந்த 9 அமைச்சர்களுக்கான துறைகள் முறையே அறிவிக்கப்பட்டது.

அதில் முதலமைச்சர் விஜய்க்கு, காவல்துறை, உள்துறை, சிறப்புத் திட்ட செயலாக்கம் ஆகிய துறைகள் ஒதுக்கப்பட்டன.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையில், பள்ளிக் கல்வித்துறையும் தமிழ் வளர்ச்சித் துறையும், எழும்பூர் சட்டமன்ற உறுப்பினரான அமைச்சர் ராஜ்மோகனுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் அமைச்சர் ராஜ்மோகன், தனது கல்வித்தகுதி குறித்து வெளியிட்டிருந்த திரித்த தகவல் வெகு மக்களின் விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.
இது குறித்து தி.மு.க செய்தித்தொடர்பாளர் சரவணன் அண்ணாதுரை, தனது சமூக வலைதளப் பக்கத்தில், “பட்டம் பெற்றிருந்தால் தான் கல்வி அமைச்சராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஆனால், இல்லாத கல்வித் தகுதியை பெற்றதாக சொல்வதுக் கூடாது. தமிழ்நாட்டிற்கு இது புதிது.
அப்படியே மோடி அரசாங்கத்தை பார்ப்பது போல் இருக்கிறது என ஏன் சொல்கிறோம் என்றால், ஒன்றிய அரசின் உயர்கல்வி துறை அமைச்சராக இருந்த ஸ்ம்ரிதி இரானியின் கல்வித் தகுதியும் இப்படித்தான் சர்ச்சைக்குள்ளானது.
IIMAT - தமிழ் நாட்டின் கல்வித்துறை அமைச்சர் படித்ததாக சொல்லும் நிறுவனம்” என பதிவிட்டு, ராஜ்மோகன் பயின்றதாக சொல்லப்படும் கல்வி நிறுவனத்தின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.
இதனையடுத்து, கல்வித்துறை சார்ந்த வல்லுநர்கள், அமைச்சர் ராஜ்மோகனை விமர்சித்து வருகின்றனர்.






