
தமிழ்நாடு சட்டப்பேரவையில் சட்டம் - ஒழுங்கு மானியக்கோரிக்கை மீதான விவாதம் செப்டம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. அப்போது எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தமிழ்நாட்டில் அதிகரித்துள்ள கொலை, கொள்ளைச் சம்பவங்கள் குறித்துக் கேள்வி எழுப்பினார்.
மேலும் த.வெ.க உறுப்பினர்கள் பலரே பாலியல் வன்கொடுமை, கொள்ளை போன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர் என்பதை ஆதாரத்துடன் கேள்வி எழுப்பினார்.
இந்த விவாதத்தில் உடனே பதில் அளிக்காமல், 3 நாட்கள் கழித்துப் பதில் அளிப்பதாக முதலமைச்சர் விஜய் கூறிவிட்டு அவையிலிருந்து வெளியேறினார்.
இதையடுத்து இன்று மூன்று நாட்கள் கழித்து, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகளுக்குப் பதில் அளிப்பார் என்று பார்த்தால், வழக்கம்போல் சினிமா பாணியில் கத்திக் கத்திப் பேசி உரிய பதில்களை அளிக்காமல் தி.மு.க மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
நம் கையில்தான் சட்டம் இருக்கிறது, நாம்தான் முதலமைச்சர் என்பதையே மறந்து, தேர்தல் பிரச்சாரத்தில் என்ன பேசினாரோ அதே கதையைப் பேரவையில் சொல்லியிருக்கிறார். "இந்த ஆட்சியில் இப்படி இருக்கிறதே" என்று கேட்டதற்கு, "கடந்த ஆட்சியில் இப்படி இருந்ததே" எனத் திரும்பக் கேள்வி எழுப்பித் தனது பொறுப்பை மீண்டும் தட்டிக்கழித்துள்ளார்.
பின்னர், முதலமைச்சரின் பதிலுரைக்குத் தங்களைப் பேச அனுமதிக்க வேண்டும் எனத் தி.மு.க உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் சபாநாயகர் அனுமதி கொடுக்க மறுத்து வந்தார். இதனால் தி.மு.க உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கைக்கு முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து முதலமைச்சர் "எதிர்க்கட்சிகளைப் பேச அனுமதியுங்கள்" என்று கூறினார். ஆனால், நான்தான் இறுதி முடிவு எடுப்பேன் என கூறி ஜனநாயகத்திற்கு விரோதமாக சபாநாயகர் திட்டவட்டமாகப் பேச அனுமதி மறுத்தார்.
பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் தி.மு.க உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். மேலும் ஒருதலைப்பட்சமாக நடந்துகொண்ட சபாநாயகருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர்.
இது குறித்து சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ள எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ”அமலாக்கத்துறை குற்றச்சாட்டுகளை பிரிண்ட் அவுட் எடுத்து வந்து படிக்க 3 நாட்கள் எதற்கு? பதிலற்ற பதிலுரை - பழிபோடும் பேச்சு - diversion tactics - மொத்தத்தில் எந்த preparation-ம் இல்லாமல், Roll Camera, Action mode-ல் Cringe டயலாக் பேசி இருக்கிறார் dummy CM" என தெரிவித்துள்ளார்.






