தமிழ்நாடு

GST சரிவால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : த.வெ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய டி.ஆர்.பி.ராஜா!

தமிழ்நாட்டின் GST வரி வசூல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1% சரிவடைந்துள்ளது.

GST சரிவால் தமிழ்நாட்டிற்கு ஏற்பட்டுள்ள ஆபத்து : த.வெ.க அரசுக்கு கேள்வி எழுப்பிய டி.ஆர்.பி.ராஜா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2026 ஆகஸ்ட் மாதத்திற்கான தமிழ்நாட்டின் GST வரி வசூல் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 1% சரிவடைந்துள்ளது. தேசிய அளவில் மற்றும் பிற மாநிலங்களில் ஜிஎஸ்டி வருவாய் கணிசமாக உயர்ந்திருக்கும் வேளையில், தமிழ்நாட்டில் மட்டும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு மட்டும் -1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை என முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக டி.ஆர்.பி.ராஜா வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், ”தமிழ்நாட்டின் வருவாய் இயந்திரம் சிவப்பு எச்சரிக்கை காட்டுகிறது! இதே நிலை தொடர்ந்தால், செலவுகளைக் குறைப்பதா? மேலும் கடன் வாங்குவதா? என்ற கடினமான நிலைக்கு #தமிழ்நாடு அரசு விரைவில் தள்ளப்படலாம்!

ஆகஸ்ட் மாத GST புள்ளிவிவரங்கள் மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட வேண்டியவை.2025 ஆகஸ்டில் ₹10,329 கோடியாக இருந்த தமிழ்நாட்டின் GST வசூல், 2026 ஆகஸ்டில் ₹10,189 கோடியாகக் குறைந்துள்ளது.அதாவது -1% சரிவு!

ஆனால் இதே காலகட்டத்தில்:

இந்தியா +9%, கர்நாடகா +13%, குஜராத் +15%, தெலங்கானா +16%, உத்தரப் பிரதேசம் +19%, மகாராஷ்டிரா +8%, தமிழ்நாடு மட்டும் -1%!

சாதாரண மக்களுக்கு இந்த GST எண்ணைப் பற்றி ஏன் கவலை இருக்க வேண்டும்? ஏனென்றால், தமிழ்நாடு அரசின் சொந்த வரி வருவாயில் சுமார் 38% SGST மூலமாக மட்டுமே வருகிறது !

வளர்ச்சிப் பணிகளுக்கு அதிக நிதி ஒதுக்கவேண்டும் ஆனால் அதே நேரத்தில் கடன் சுமையையும் கட்டுப்படுத்த வேண்டும். இந்தக் கணக்கு சரியாக வர வேண்டுமென்றால் அரசின் வருவாய் கட்டாயம் வளர வேண்டும். ஆனால் ஆகஸ்ட் மாத GST காட்டுவதோ அதற்கு நேர் எதிரான -1% சரிவு!

“ஒரு மாத புள்ளிவிவரத்தை வைத்து ஒரு வருடத்திற்கான போக்கைத் தீர்மானிக்க முடியாது” என்று சிலர் சொல்லலாம்.

உண்மைதான். ஆனால் இந்தியா +9% வளரும்போது, நம்மோடு போட்டியிடும் முக்கிய மாநிலங்கள் அனைத்தும் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்யும்போது,

தமிழ்நாடு மட்டும் -1%-ல் இருப்பதை சாதாரணமாகக் கடந்து செல்ல முடியாது. இது நிச்சயம் ஒரு முக்கிய எச்சரிக்கை!

இந்த நிலை தொடர்ந்தால்: பற்றாக்குறையாகும் பணத்தை எங்கிருந்து கொண்டு வரப் போகிறார்கள்? மேலும் கடன் வாங்கப் போகிறார்களா? வேறு வரிகளை உயர்த்தப் போகிறார்களா?அல்லது சாலைகள், உட்கட்டமைப்பு மற்றும் வளர்ச்சித் திட்டங்களுக்கான செலவுகளைக் குறைக்கப் போகிறார்களா?

வருவாய் இல்லாமல் பட்ஜெட் வெறும் காகிதக் கணக்குதான்!

இந்த -1% GST சரிவு ஒரு தொடர்கதையாக மாறுவதை தமிழ்நாடு தாங்க முடியாது! இது கட்டுப்படுத்த முடியாத சரிவாக மாறுவதற்கு முன்பாவது இன்றைய தவெக அரசு விழித்துக்கொள்ளுமா? இந்த சரிவிக்கு என்ன காரணம் என்று அரசு தெளிவாக சொல்ல வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories