
உலகளவில் வெறும் புராணங்களை வரலாறாக கொண்டாடி வரும் நிலையில், அறிவியல் சான்றுகளுடன் தமிழர்களின் வரலாறும், பண்பாடும் வெளிப்பட்டு வருகிறது.
அதற்கு, கீழடி, பொருநை உள்ளிட்ட அகழாய்வு கண்டெடுப்புகள் சான்றுகளாக அமைந்துள்ளன. அவ்வரிசையில் தென்காசியில் கி.பி. 5-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது.
இதனைச் சுட்டிக்காட்டி, தி.மு.க முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,

“தென்காசி மாவட்டம், மலையடிப்பட்டி அகழாய்வில், படிக்கட்டுடன் கூடிய சங்ககாலச் செங்கல் கிணற்றில் இருந்து கி.பி. 5ஆம் நூற்றாண்டைச் சேர்ந்ததாகக் கருதத்தக்க நடுகல் கல்வெட்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
தமிழி எழுத்து முறையில் இருந்து வட்டெழுத்தாகத் தமிழின் வரிவடிவம் உருமாறிய காலத்தைச் சேர்ந்த இக்கல்வெட்டில், “கருக்கண் சுளகன் நன்னங்கொடியன்” என்ற பெயர் இடம்பெற்றுள்ளது.
புலிமான் கோம்பை, ஆப்பனூர், மல்லிகாபுரம் ஆகிய இடங்களில் கண்டெடுக்கப்பட்ட நடுகற்களைப் போலவே வீரரின் உருவம் பொறிக்கப்படாமல், எழுத்தின் வழியே நினைவைப் பதிவு செய்திருப்பது, அக்காலத் தமிழர்களின் எழுத்தறிவு, வீர மரபு மற்றும் பண்பாட்டு நுண்ணுணர்வை வெளிப்படுத்தும் அரிய சான்றாக அமைந்துள்ளது.
ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் நமது மண்ணில் நிலைத்திருக்கும் இத்தகைய கல்வெட்டுகள், தமிழரின் தொன்மையையும் தனித்துவமான பண்பாட்டு அடையாளத்தையும் உலகிற்கு எடுத்துரைக்கும் பெருமைமிகு வரலாற்றுப் பக்கங்களாகத் திகழ்கின்றன.”






