
பட்டாசுத் தொழில் செய்யும் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், எவ்விதப் பிரச்சினையும் இல்லாமல் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக ஒரு மாயத்தோற்றத்தைத் தொழில்துறை அமைச்சர் ஏற்படுத்துகிறார் என்று திமுக முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தைக் குறிப்பிட்டுப் பேசிய தங்கம் தென்னரசு, "பட்டாசு ஆலைகளில் அதிகாரிகள் திடீர் ஆய்வுகள் மேற்கொள்வதால் தொழில் பாதிக்கப்படுவதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்" என்று அவர் குறிப்பிட்டார்.
மேலும், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா ஒரு மாயபிம்பத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும், உண்மையில் அங்குள்ள பட்டாசுத் தொழிலாளர்கள் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் கூறினார்.
திமுக மட்டுமல்லாமல், பொதுமக்களும் பிற கட்சியினரும் இதற்காகப் போராட்டம் நடத்தியதாகக் கூறிய அவர், "விதிமுறைகளை மீறிய தொழிற்சாலைகள் மீது நடவடிக்கை எடுப்பது தவறில்லை; ஆனால், ஆய்வு என்ற பெயரில் அதிகாரிகள் ஏற்படுத்தும் இடையூறுகளால் ஒட்டுமொத்தப் பட்டாசுத் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்பட்டுள்ளது" தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்துப் பேசிய தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா, "பாதுகாப்புக் குறைபாடுகளைக் கண்காணிக்கவே இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன; அதன் பின்பு தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் பட்டாசு ஆலைகளில் செய்யப்பட்டுள்ளன" என்றார்.
மேலும், த.வெ.க ஆட்சிக்கு வந்த பின் மட்டும் சிவகாசியில் 4 விபத்துகள் நடந்துள்ளதாகவும், அப்போது உயிரிழப்பு ஏற்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா 4 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கி உதவியவர் முதலமைச்சர் தான் என்றும் அவர் விளக்கமளித்தார்.






