
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று உணவு மற்றும் கூட்டுறவுத் துறை மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது.
அப்போது அமைச்சர் செங்கோட்டையன், ”ரேஷன் அரிசி கோழி, ஆடுகளுக்குத் தீவனமாக வைப்பதற்குத்தான் பயன்படுத்தப்பட்டது” என ஏழை எளிய மக்கள் உண்ணும் ரேஷன் அரிசியைப் பற்றி அவமதிக்கும் வகையில் பேசினார்.
உடனே குறுக்கிட்ட தி.மு.க கொறடா எ.வ.வேலு, "அவை முன்னவர், அவைத் தலைவருக்கு உறுதுணையாக இருந்து அவையை நடத்த உதவ வேண்டும். ஆனால், அவை முன்னவர் செங்கோட்டையன் அவர்களே பிரச்சனையைத் தூண்டிவிடும் வகையில் பேசினால் எப்படி அவையை நடத்த முடியும்?
எங்கள் ஆட்சியில் எதிர்வரிசையில் அமர்ந்திருந்த செங்கோட்டையன், என்றாவது ஒருநாள் அவையில் எழுந்து அரிசி சரியில்லை என்று கேள்வி கேட்டாரா என்றால், இல்லை.
தி.மு.க ஆட்சியில் பொது விநியோகத் திட்டம் சிறப்பாக இருக்கிறது என உச்ச நீதிமன்ற நீதிபதிகளே தெரிவித்துள்ளனர். ஏழை எளிய மக்கள் உண்ணும் ரேஷன் அரிசியைக் கொச்சைப்படுத்தி மூத்த அமைச்சர் செங்கோட்டையன் பேசலாமா?" எனக் கடுமையான கேள்விகளை எழுப்பி விமர்சித்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையனின் பேச்சுக்குப் பொதுமக்களும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.






