
நீட் தேர்வை எதிர்த்து போராடிய மாணவர்களை அவமதிக்கும் வகையில் பேசிய த.வெ.க அமைச்சர் சி.டி.ஆர்.நிர்மல் குமாருக்கு தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணியின் சமூகவலைதள பக்கத்தில் ”ஏழை மற்றும் எளிய மக்களின் குழந்தைகள் மருத்துவராகக் கூடாது என்பதுதான் உங்கள் நோக்கமா? 4 ஆண்டுகள் படித்து மருத்துவர் ஆக நினைக்கும் மாணவர்களிடம் கார்பெண்டர், பிளம்பர் வேலை பாருங்கள் என்று அறிவுரை சொல்ல நீங்கள் யார்? ஒரு மாணவனின் உயரிய கனவை மட்டம் தட்டுவது எந்த வகையான வழிகாட்டுதல்?
மாணவர்களுக்கு வழிகாட்டுகிறேன் என்ற பெயரில், அவர்களின் எதிர்காலக் கனவுகளையே முடக்கும் பேச்சு இது. நீட் தேர்வு வேண்டாம், வேறு வேலை பார் என்று சொல்வது மாணவர்களின் கடின உழைப்பையும் சமூக நீதியையும் அவமதிக்கும் செயல்!
திறமையை வளர்த்துக்கொள்ள ஊக்கப்படுத்துவதா அல்லது கனவையே கைவிடச் சொல்வதா? கடின உழைப்பால் முன்னேறத் துடிக்கும் ஏழை மாணவர்களைப் பார்த்து உனக்கு மருத்துவம் வேண்டாம் என்று சொல்வதற்குப் பதிலாக, அவர்களுக்கான கல்வி வாய்ப்புகளையும் நல்ல சூழலையும் உருவாக்க வேண்டியதுதானே அரசின் பொறுப்பு? முதலில் அந்த வேலையைப் பாருங்கள்.
மாணவர்களின் உழைப்பைக் கேலி செய்வதையும், அவர்களின் மருத்துவக் கனவை முடக்குவதையும் நிறுத்துங்கள். இனியாவது சங்கி எண்ணங்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு ஊக்கம் அளிக்கப் பாருங்கள்" என தெரிவித்துள்ளது.






