தமிழ்நாடு

“நீட் தேர்வு ரத்து என்பதே ஒரே தீர்வு” : மக்களவையில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேச்சு!

நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்; சட்டம் கொண்டுவருவதால் எந்தப் பயனும் இல்லை.

“நீட் தேர்வு ரத்து என்பதே ஒரே தீர்வு” : மக்களவையில் தி.மு.க எம்.பி தயாநிதி மாறன் பேச்சு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நீட் தேர்வு வினாத்தாள் கசிவதற்குப் பொறுப்பேற்று ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி, டெல்லியில் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி அமைப்பினர் 35 நாட்களுக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தை ஒடுக்கும் வகையில் ஒன்றிய பா.ஜ.க அரசு மாணவர்கள் மீது தடியடி நடத்தியது. இதனால், இந்தப் போராட்டம் நாடு முழுவதும் பரவியது. இதையடுத்து, ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகினார். மேலும், நுழைவுத் தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், புதிய சட்டத்திருத்தம் நடப்பு நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் எனப் பிரதமர் மோடி கூறினார்.

இந்நிலையில், நீட் உள்ளிட்ட பொதுத்தேர்வு முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவைத் தடுப்பதற்காகப் புதிய பொதுத் தேர்வுகள் திருத்த மசோதா மக்களவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, அந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய தி.மு.க எம்.பி தயாநிதி மாறன்.” நீட் தேர்வால் தமிழ்நாட்டில் மட்டுமல்லாது பல மாநிலங்களிலும் மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்துள்ளன. நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். சட்டம் கொண்டுவருவதால் எந்தப் பயனும் இல்லை.

நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடும், தி.மு.க-வும்தான் முதன்முதலில் குரல் கொடுத்தன. நாடாளுமன்றத்தில் நீட் மசோதாவைத் தி.மு.க எதிர்த்தது. அப்போதே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும், அன்றைய முதலமைச்சரான மு.க.ஸ்டாலின் அவர்கள் கடிதம் எழுதினார். மேலும் பிரதமர் மோடிக்கும் கடிதம் எழுதினார். அதுமட்டுமல்லாது, சட்டமன்றத்திலும் நீட் விலக்கு சட்ட மசோதாவைக் கொண்டு வந்தது திராவிட மாடல் அரசு. ஆனால், ஆளுநர் அதற்கு ஒப்புதல் வழங்கவில்லை. இப்படி நாடாளுமன்றத்திலும், சட்டமன்றத்திலும், மக்கள் மன்றத்திலும் நீட் தேர்வுக்கு எதிராகத் தொடர் போராட்டம் நடத்தி வருகிறது.

பா.ஜ.க ஆட்சியில் தான் நீட் தேர்வு வினாத்தாள் தொடர்ச்சியாகக் கசிந்து வருகிறது. ஆனால், இதன் மீது உரிய நடவடிக்கைகள் எடுக்காமல், வினாத்தாள் கசிந்ததால் தான் மாணவர்கள் மீண்டும் சிறப்பாகத் தேர்வு எழுதியதாக ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறுகிறார். இது முரணாகத் தெரியவில்லையா?

இளம் தலைமுறையினரின் குரலை ஒன்றிய அரசு கேட்க வேண்டும்; நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். காங்கிரஸ் செய்த தவறைத் தொடர வேண்டாம்; நீட் தேர்வை ரத்து செய்யுங்கள்" என தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories