தமிழ்நாடு

மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!

மீனவர்களுக்கு ரூ.25 க்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்தக்கூடாது என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

மீனவர்களுக்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலையை உயர்த்த தவெக அரசு முடிவு: அனிதா ராதாகிருஷ்ணன் எதிர்ப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மீனவர்களுக்கு வழங்கப்படும் ரூ.25 க்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை உயர்த்த உள்ளதாகவும் அளவை குறைக்க உள்ளதாகவும் செய்தி வருகிறது. இது மீனவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே மீனவர்களின் நலனை கருதி இத்திட்டத்தின்படி நாட்டுப்படகு எண்ணிக்கையை, வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை அதிகப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அனிதா ராதாகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

தமிழ்நாட்டில் கடலோர மாவட்ட மக்களின் மீனவர்களின் முதன்மை வாழ்வாதாரம் மீன்பிடித் தொழிலாகும். பல்லாயிரக்கணக்கான மீனவ மக்கள் கடலையும் அரசின் திட்டங்களையும் நம்பி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட நாட்டுப்படகு மீனவர்களுக்கு தொழில் செய்வதற்கு தொழிலக மண்ணெண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டு தொழில் முடங்கும் நிலை ஏற்பட்டது.

இந்நிலையில் மீனவ மக்களின் நெடுங்கால கோரிக்கையை ஏற்று 2010-ம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் முதலமைச்சராக பொறுப்பு வகித்தபோது பதிவு செய்யப்பட்ட ஒரு நாட்டுப் படகுக்கு வெளி சந்தையில் மண்ணெண்ணெய் விலை எவ்வளவாக இருந்தாலும் ஆண்டிற்கு 2400 லிட்டர் தொழிலக மண்ணெண்ணெய் மானிய விலையாக ரூ.25 க்கு வழங்குவது என்றும் எக்காரணத்தை கொண்டும் விலையை உயர்த்தக் கூடாது என்றும் அரசாணை பிறப்பித்து இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

நாட்டுப்படகு மீனவர்களுக்கு பெரிதும் பயனுள்ள இத்திட்டத்தின்படி மண்ணெண்ணெய் அளவு ஆண்டிற்கு 3400 லிட்டர் என உயர்த்தப்பட்டது. 2023-ம் ஆண்டு இராமநாதபுரத்தில் நடைபெற்ற மீனவர் மாநாட்டின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 3700 லிட்டராக மண்ணெண்ணெய் அளவை உயர்த்தியுள்ளார்.

இதனடிப்படையில் தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குப்படுத்தும் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்ட மீனவர்களின் 6500 நாட்டுப்படகுகளுக்கு ரூ.25 விலையில் தொழிலக மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. மண்ணெண்ணெய் கொள்முதல் மற்றும் விற்பனையில் ஏற்படும் வித்தியாச தொகையை அரசு மானியமாக வழங்கப்பட்டு வருகிறது.

நாட்டுப்படகு மீனவர்களின் வாழ்வாதாரத்தில் வரப்பிரசாதமாக உள்ள இத்திட்டத்தை மேலும் அதிகப்படுத்த வேண்டும். ரூ.25 க்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் விலை உயர்த்த உள்ளதாகவும் அளவை குறைக்க உள்ளதாகவும் செய்தி வருகிறது. இது மீனவர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே மீனவர்களின் நலனை கருதி இத்திட்டத்தின்படி நாட்டுப்படகு எண்ணிக்கையை, வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை அதிகப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories