தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில், நடப்புக் கல்வியாண்டில் 300-க்கும் அதிகமான மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின்கீழ், தினசரி 250-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்றைய தினம் ஏற்பட்ட உணவுப் பற்றாக்குறை காரணமாக 40 குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படவில்லை. இதனால் பசியால் தவித்த குழந்தைகளுக்குப் பள்ளி ஆசிரியர்கள் பிஸ்கட் பாக்கெட்டுகளை வாங்கிக் கொடுத்து நிலைமையைச் சமாளித்துள்ளனர்.
இச்சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகக் கோவில்பட்டி தொடக்கக் கல்வி மாவட்ட அலுவலரிடம் விளக்கம் கேட்டபோது, "பள்ளியில் புதிதாக மாணவர் சேர்க்கை அதிகரித்ததால் உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டது" என்று வினோதமான விளக்கத்தை அளித்தார்.
மேலும், "பள்ளி நிர்வாகத்திற்கும் காலை உணவுத் திட்டப் பணியாளர்களுக்கும் இடையே நிலவி வரும் கருத்து வேறுபாடு காரணமாகவே இந்த உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது" என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஆகையால், துறை சார்ந்த அமைச்சரும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளும் உடனடியாக இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும். விளாத்திகுளம் தொடக்கப் பள்ளி மட்டுமின்றி, தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டம் முறையாகச் செயல்படுத்தப்படுகிறதா? என்பதை உரிய ஆய்வுக்குட்படுத்த வேண்டும் எனப் பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.






