
தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா வழித்தோன்றலாக தி.மு.க எனும் பேரியக்கத்தை சுமார் 50 ஆண்டுகாலம் கட்டிக்காத்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103ஆவது பிறந்தநாள் நாளை (ஜூன் 3) தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது.
அதற்கான ஏற்பாட்டுப் பணிகளை கடந்த ஒரு மாத காலமாகவே கழகத்தினர் முன்னின்று மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தி.மு.கழக இளைஞர் அணிச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின், முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளில் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் திறக்கப்பட உள்ளது என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்ததாவது,
“75-ஆண்டுகளாக, தமிழ்நாட்டு அரசியலின் திசைவழியைத் தீர்மானிக்கும் பேரியக்கமாம் தி.மு.கழகத்தின், தலைமை நிலையமாக செயல்பட்ட ‘அன்பகம்’ இன்று கழக இளைஞர் அணி தலைமையகமாக விளங்கி வருகிறது.

இளைஞர் அணியை உருவாக்கியதுடன் தமிழ்நாடு முழுவதும் நிகழ்ச்சிகள் நடத்தி, நிதி திரட்டி, அன்பகத்தை இளைஞர் அணி வசமாக்கிய இன்றைய கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், 1988-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாளன்று இனமானப் பேராசிரியர் தலைமையில், கலைஞர் அவர்களைக் கொண்டே அன்பகத்தைத் திறந்து வைத்தார்.
28 ஆண்டுகளைக் கடந்து, அன்பகத்தை நமக்கு பெற்றுத் தந்த கழகத் தலைவர் அவர்களே, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளான நாளை (ஜூன் 3), காலை 10:00 மணி அளவில் , 75-அடி உயர கம்பத்தில் கழகக் கொடியேற்றி- தந்தை பெரியார்- பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் புதுப்பிக்கப்பட்ட அன்பகம் அலுவலகத்தையும் திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்கிறது கழக இளைஞர் அணி.
இந்த நன்னாளை, இளைஞர் அணியினர் அவரவர் வசிக்கும் பகுதிகளில், இருவண்ணக் கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். ”






