
தமிழ்நாட்டில் நாளை மறுநாள் (ஏப்ரல் 23) சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி கடந்த ஒரு மாதமாக வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வந்தனர்.
இந்தச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியே வெல்லும் எனப் பல கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி வருகின்றன. இதை உறுதி செய்யும் வகையிலேயே பிரச்சாரக் களமும் அமைந்திருந்தது.
தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியினர் தமிழ்நாடு முழுவதும் கடந்த ஒரு மாதமாகத் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இறுதிக்கட்டமாகச் சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக வாக்குச் சேகரித்தார்.
அதேபோல் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கனிமொழி எம்.பி. ஆகியோரும் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் மேற்கொண்டனர். கடந்த ஒரு மாதமாக நடைபெற்று வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து, மாலை 6 மணிக்கு மேல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்றும், வீடு வீடாகச் சென்று வாக்குக் கேட்கத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மேலும், தொகுதிக்குச் சம்பந்தம் இல்லாத நபர்கள் உடனே வெளியேற வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.






