
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31-ஆம் தேதி குடியரசுத் தலைவர் உரையுடன் தொடங்கியது. பின்னர் பிப்ரவரி 1-ஆம் தேதி ஒன்றிய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இதையடுத்து குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.அதேபோல் ஒன்றிய பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற்றது.
இதில் முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி மனோஜ் முகுந்த் நரவணே எழுதிய புத்தகம் (Four Stars of Destiny), இந்திய - அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் மற்றும் சர்வதேச அளவில் பேசப்பட்ட எப்ஸ்டீன் கோப்புகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து பிப்ரவரி 11-ஆம் தேதி முதல் அமர்வு முடிவடைந்தது. இடைவேளைக்குப் பிறகு, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது அமர்வு மார்ச் 9-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது
இந்நிலையில், மாநிலங்களவையில் நிதி மசோதா மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் பி.வில்சன், "தமிழ்நாட்டு மக்களிடமிருந்து ஒரு ரூபாய் வரி வசூலித்தால், அதில் 23 காசுகளை மட்டுமே ஒன்றிய அரசு திருப்பி வழங்குகிறது.
மேலும், "தமிழ்நாட்டுக்கு 23 காசுகள் மட்டுமே வழங்கும் ஒன்றிய அரசு, பீகார் மாநிலத்திலிருந்து ஒரு ரூபாய் வசூலித்துவிட்டு, அதற்குப் பதிலாக 7 மடங்கு அதிகமாக, அதாவது 6 ரூபாய் 90 காசுகளைத் திருப்பி வழங்குகிறது.
அதேபோல், உத்தரப் பிரதேசத்தில் ஒரு ரூபாய் வசூலித்தால் 1 ரூபாய் 66 காசுகள் திருப்பி வழங்கப்படுகிறது. அதிக வளர்ச்சியைச் சாதித்து வரும் தமிழ்நாட்டு மக்கள், ஒன்றிய அரசின் இந்தப் பாகுபாடு காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கடந்த பல ஆண்டுகளாகத் தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு எதையும் செய்யவில்லை. வழங்க வேண்டிய 10,000 கோடி ரூபாய் நிதியைக் கூட வழங்காமல் நிலுவையில் வைத்துள்ளது. இதற்கான பதிலைத் தமிழ்நாட்டு மக்கள் ஏப்ரல் 23-ஆம் தேதி வழங்குவார்கள்” என தெரிவித்துள்ளார்.






