
துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் நேற்று (2.3.2026) பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் மொத்தம் 15.33 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மாளிகை மற்றும் புதிய பள்ளிக் கட்டடம் ஆகியவற்றை பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார்.
இராயபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கல்லறை சாலையில் ஆர்.எஸ்.ஆர்.எம் மருத்துவமனை அருகில் இராயபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.மூர்த்தி அவர்களின் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டுத் திட்ட நிதி மற்றும் மாநகராட்சி மூலதன நிதியின் கீழ் 10.32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மாளிகை கட்டப்பட்டுள்ளது.

முத்தமிழறிஞர் கலைஞர் திருமண மாளிகை 19,528 சதுர அடி கொண்டதாகும். தரைத்தளத்தில் கார் மற்றும் இருசக்கர வாகனம் நிறுத்துமிடம், நவீன சமையற்கூடம் மற்றும் 125 நபர்கள் அமர்ந்து உணவு சாப்பிடுவதற்கான வசதிகளும், 350 நபர்கள் இருக்கைகள் கொண்ட குளிரூட்டப்பட்ட திருமண மண்டபம், மணமகன் அறை, மணமகள் அறை, மின்தூக்கி வசதி, சேமிப்பு அறை, பாதுகாப்பு அறை மற்றும் கழிவறை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இராயபுரம் பகுதி மக்கள் பெரிதும் பயன்பெறுவர்.

புளியந்தோப்பு - சென்னை தொடக்கப் பள்ளிக் கட்டடம்
திரு.வி.க. நகர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புளியந்தோப்பு, திருவேங்கடசாமி தெரு, சென்னை தொடக்கப் பள்ளியில் பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் சிங்காரச் சென்னை 2.0 நிதியின் கீழ் 5.01 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 17,186 சதுர அடி பரப்பளவில் தரைத்தளம் மற்றும் இரண்டு தளங்களுடன் புதிதாக பள்ளிக் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.
இந்தக் கட்டடமானது 18 வகுப்பறைகள், ஆசிரியர்களுக்கான அறைகள், குடிநீர் வசதி, கழிப்பறை வசதியுடன் கட்டப்பட்டுள்ளது.








