
சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா - சான்றோர் போற்றும் மாண்பாளர்! தமிழ் நிலம் காக்கும் படைவீரர்! நிகழ்ச்சி சென்னை பெரியார் திடலில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மநீம தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன், கழக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் ஜெகத்ரட்சகன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, பேச்சாளர் சுகி சிவம் மற்றும் கழக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய கமல்ஹாசன் எம்.பி, நான் குழந்தைப் பருவத்தில் இருந்து மிகவும் மதித்து வளர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் பிறந்த நாள். இது 5 வருட அரசியலை பற்றி பேசும் இடமல்ல. 100 வருட அரசியலை பற்றி பேசும் இடம்.
நூல் பிடித்தாற் போல் இந்தக் கழகம் நீண்டு கொண்டே செல்கிறது. தெற்கு இனி தேய விடமாட்டோம். இனி தலைநிமிர்ந்து நிற்போம் என்றார் நம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நமது முதலமைச்சர் அடுத்த முறை வரவேண்டும் என்று நினைப்பது ஆசையல்ல, தேவை. மக்கள் நீதி மய்யத்துக்கும் சேர்த்து தான் சொல்கிறேன்.

மக்களை குடும்பமாக நினைக்கும் தலைவர்கள் எல்லோருமே குடும்ப அரசியல் தான். அப்படி தான் தொடர வேண்டும். ஒரு இனம் பேசுகிறது. அந்த குரல் டெல்லிக்கு கேட்க ஆரம்பித்து விட்டது. இனி தெற்கு தேயவே தேயாது. தேயவும் விடமாட்டோம். 5 வருட ஆட்சி, நிறை குறைகள் இருந்தால் எடுத்துச் சொல்லலாம். இது கும்பல் அல்ல சங்கம்.
எனக்கு பஞ்சு மிட்டாய் பிடித்ததோ இல்லையோ, பெரியாரின் பஞ்சு தாடி பிடிக்கும். இது சிந்தனையின் நீட்சி, பெரியாரும் முக்கியம் தான். இது முதல்வரை வாழ்த்தும் எம்.பியாக இல்லை. அண்ணனை வாழ்த்தும் தம்பியாக சொல்கிறேன்.

ஒரு தேசிய தலைவரை அரசியல் களம் காண வைக்க போகிறோம். இன்று நாம் தேசத்திற்கு தேவை. அதனால் தான் இந்த கூட்டணியில் நான் சேர்ந்தேன். திராவிடம் என்பது நாடு தழுவியது. அதற்கான சான்று கிடைத்துக் கொண்டே இருக்கிறது. திராவிடம் நாடு தழுவ வேண்டும். தேசிய கீதத்தில் யாரும் கை வைக்க கூடாது.
இது திராவிடர்களின் போராட்டம். இது கேக் வெட்டிக் கொண்டாடும் விழா அல்ல. நாட்டை ஒட்டும் விழா. அந்த நாயகன் தான் முதலமைச்சர் மு.க ஸ்டாலின். நாளை நமதாக வேண்டும்.






