
தமிழ்நாட்டு மக்கள் மனதில் வேரூன்றியிருக்கும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில், இன்றைய நாள் (பிப்.19) தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைத்துக் கொண்டார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது,
“முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் மேல் மாறாத அன்பு கொண்டவரும், எனது அன்பு நண்பருமான ‘கேப்டன்’ விஜயகாந்த் அவர்கள் உருவாக்கிய தேசிய முற்போக்கு திராவிட கழகம், இன்று மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இணைந்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது!

சகோதரர் கேப்டன் உருவாக்கிய இயக்கத்தைத் தற்போது திறமையாக வழிநடத்தி வரும் பொதுச்செயலாளர் அன்புச் சகோதரி பிரேமலதா விஜயகாந்த் அவர்களையும், அக்கட்சியின் நிர்வாகிகளையும் வருக வருக என வரவேற்கிறேன்.
கருப்பு சிவப்பைக் கொடியில் தாங்கியிருக்கும் தங்களது நல்வரவு - நல்லுறவு தொடர்ந்து தமிழ்நாட்டின் உயர்வுக்குப் பங்களிக்கட்டும்!
திராவிட மாடல் ஆட்சி தொடரவும், தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறவும் இணைந்து பயணிப்போம்! வெல்வோம் ஒன்றாக!”






