
தமிழ்நாட்டு மக்கள் மனதில் வேரூன்றியிருக்கும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு கூடுதல் வலுசேர்க்கும் வகையில், இன்றைய நாள் (பிப்.19) தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், சென்னை அண்ணா அறிவாலயத்தில் கழகத் தலைவர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க.வை இணைத்துக் கொண்டார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய தே.மு.தி.க பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், “யாருடன் கூட்டணி என தொடர்ந்து கேட்டவர்களுக்கான விடையை இன்று அறிவித்திருக்கிறோம். தி.மு.க.வும் தே.மு.தி.க.வும் கூட்டணியை உறுதி செய்திருக்கிறோம்.

2016-ல் கேப்டன் விஜயகாந்த் தே.மு.தி.க.விற்கு தலைமை வகித்தபோதே, தி.மு.க.வுடன் கூட்டணி அமைந்திருக்க வேண்டியது. கலைஞரும் அதைத்தான் மிகவும் விரும்பினார். ஆனால், சற்று தாமதமாக இன்று தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்திருக்கிறோம். இதுதான் தே.மு.தி.க தொண்டர்களின் விருப்பமாகவும் இருக்கிறது.
தற்போது தி.மு.க.வுடன் கூட்டணியை மட்டுமே உறுதி செய்திருக்கிறோம். தொகுதி பங்கீடு குறித்து கலந்தாலோசித்து இறுதி முடிவை முதலமைச்சர் அண்ணன் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்.
தி.மு.க.வுடன் தே.மு.தி.க முதல்முறையாக கூட்டணி அமைத்திருக்கிறது. இதனை அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றிருக்கிறார்கள்.
இந்த கூட்டணி, வருகிற சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளுக்கும் மேற்பட்ட இடங்களில் அமோக வெற்றி பெறும்” என தெரிவித்துள்ளார்.






