
அமெரிக்காவுடனான வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயிகளின் நலனை பாதிக்கும் என தி.மு.க துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் கூறிய கனிமொழி எம்.பி," நாடாளுமன்றக் கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, வெளிநாடுகளுடன் முக்கியமான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. அதுகுறித்து அவையில் விரிவான விளக்கம் அளிக்க வேண்டியது அரசின் கடமையாகும்.
ஆனால், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பிரதமர் பதிலளித்தபோது, இந்த ஒப்பந்தம் குறித்து எந்த ஒரு தெளிவான விளக்கத்தையும் அளிக்கவில்லை. இது ஜனநாயக மரபுகளை மீறும் செயலாகும்.
பிரதமர் மோடி முறையாக அறிவிப்பதற்கு முன்னதாகவே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த ஒப்பந்தம் குறித்து அறிவிப்பை வெளியிட்ட பிறகே, இந்திய அரசு இதுகுறித்த தகவலைக் கூறுகிறது. இதனால் இந்த ஒப்பந்தங்களில் வெளிப்படைத்தன்மை இல்லாதது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
மேலும் இந்த ஒப்பந்தத்தில் , அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியாகும் பொருட்களுக்கு 0% வரி விதிக்கப்படும் நிலையில், இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகும் பொருட்களுக்கு 18% வரி விதிக்கப்படுவதாகத் தெரிகிறது. இது ஒரு நியாயமான வர்த்தக ஒப்பந்தமாக இருக்க முடியாது. இது இந்தியப் பொருளாதாரத்திற்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தும்.
அமெரிக்காவின் வேளாண் பொருட்கள் இந்தியச் சந்தையில் தாராளமாக நுழைய இந்த ஒப்பந்தம் வழிவகை செய்யும். இதனால் இந்தியா ஒரு 'டம்பிங் கிரவுண்ட்'போல மாறிவிடும் அபாயம் உள்ளது. இந்திய விவசாயிகள் இதனைத் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்த ஒப்பந்தம் அமலானால், நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்படும்" என தெரிவித்துள்ளார்.






