
ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே இஸ்லாமியர்கள் மீது வெறுப்பை பரப்பி பல்வேறு செயல்களில் ஈடுபட்டது. நாட்டையே உலுக்கிய குஜராத் கலவரமே இதற்கு பெரும் எடுத்துக்காட்டு. அதன் பிறகே வட மாநிலங்களில் பாஜக மிகவும் பலமடைந்தது. மேலும் பாஜக ஆளும் மாநிலங்களில் இஸ்லாமியர்கள், தலித்துகள் கொடுமைக்கு உள்ளாகினர்.
இதைத்தொடர்ந்து 2016-ம் ஆண்டு ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு பல்வேறு மாநிலங்களுக்கு பரவத் தொடங்கியது. மேலும் இஸ்லாமியர்களை குறிவைத்து இந்துத்துவ கும்பல் தாக்குதல் நடத்துவதோடு, 'ஜெய் ஸ்ரீ ராம்' என்ற கோஷத்தையும் போட சொல்லி பொதுவெளியில் இஸ்லாமியர்கள் துன்புறுத்தல்களுக்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் அண்மைக்காலமாக பாஜக ஆளும் உத்தர பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் சிறு குற்றம் இழைத்தாலோ, அல்லது குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானாலோ இஸ்லாமியர்கள் வீடு புல் டோசர் கொண்டு இடிக்கப்படுகிறது. இப்படி இஸ்லாமியர்கள் தொடர் தாக்குதலுக்கு உள்ளாகி வரும் நிலையில், தற்போது மேலும் வன்மத்தை கக்கும் விதமாக அசாம் பாஜக வீடியோ வெளியிட்டது பெரும் அதிரவலையை ஏற்படுத்தியுள்ளது.

பாஜக ஆளும் அசாம் மாநிலத்தில் முதலமைச்சராக ஹிமந்த பிஸ்வா சர்மா இருந்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 2 நாட்களுக்கு முன்னர் 'point-blank shot' என்ற வாசகத்தோடு அசாம் பாஜகவின் அதிகாரப்பூர்வ சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது. அந்த வீடியோவில் ஹிமந்த பிஸ்வா சர்மா, துப்பாக்கியோடு இஸ்லாமிய மக்களை குறிவைத்து சுடுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்ததோடு, 'இனி கருணை இல்லை' என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வீடியோ வெளியாகி கண்டனங்கள் குவிந்த நிலையில், சில மணி நேரத்திலேயே வீடியோவை பாஜக அசாம் நீக்கியது. எனினும் இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து பாஜகவின் இந்த செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகிறது. பாஜகவின் இந்த செயல் "இனப்படுகொலைக்கான அழைப்பு" என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.






