
இன்று பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது ஆண்டு நினைவு நாள்.
பச்சையப்பன் கல்லூரியில் படித்து எம்.ஏ. பட்டம் பெற்று, 5 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த தந்தை பெரியார் அவர்களைத் தலைவராக ஏற்று, அவரது கொள்கைப்படி வாழ்ந்து, அந்தக் கொள்கைக் கொடி உயர வாழ்நாள் முழுதும் பாடுபட்டவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் காடு மேடுகளில் எல்லாம், பட்டி தொட்டிகளில் எல்லாம், சுற்றிச்சுற்றி வந்து தமிழ்மொழியும், தமிழ்நாடும், தமிழ் மக்களும் தலைநிமிர்ந்து தன்மானத்துடன் வாழ வேண்டும் எனும் உணர்வோடு உழைத்தவர்.
முத்தமிழறிஞர் கலைஞர் முதலான இரண்டாம் நிலை தலைவர்களை அரவணைத்து அவர்களையும் வழிநடத்தி, திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கத்தை உருவாக்கி 18 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்!
நம்முடைய மாநிலத்திற்கு, “தமிழ்நாடு” எனும் பெயர் சூட்டி தந்தை பெரியார் அவர்கள் தந்த சுயமரியாதைத் திருமணம் செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பைக் கண்டு, சுயமரியாதைத் திருமணத்திற்குச் சட்ட அங்கீகாரம் வழங்கவேண்டும் என்னும் உறுதியோடு, தந்தை பெரியார் அவர்களின் ஆலோசனைகளையும் ஏற்று, சுயமரியாதைத் திருமணம் செல்லும் எனும் சட்டம் இயற்றி, அதுவரை நடைபெற்று, நீதிமன்றம் செல்லாது என உரைத்த அத்தனை திருமணங்களும் செல்லும் எனும் நிலைமையை உருவாக்கிய மாமேதை அவர்!
அதுமட்டுமல்ல, மும்மொழித் திட்டத்தை ஏற்க வேண்டும் இல்லையேல் தமிழ்நாடு அரசுக்கு சமக்ர சிக்ஷா திட்டத்திற்கு நிதி வழங்க முடியாது என்கிறார்களே, அந்த மும்மொழித் திட்டம் தமிழ்நாட்டிற்குத் தேவையில்லை. தமிழ், ஆங்கிலம் இருமொழிகள் மட்டுமே தமிழ்நாட்டில் கற்பிக்கப்படும்; இனி, இந்திக்கு இங்கே இடமில்லை எனச் சட்டம் நிறைவேற்றியவர் பேரறிஞர் அண்ணா அவர்கள்.
அந்த இருமொழிச் சட்டத்தால்தான் ஆங்கிலம் தமிழ்நாட்டில் கற்பிக்கப்பட்டு தமிழ்நாட்டு இளைஞர்கள் உலகம் முழுவதும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுப் பொருளாதாரத்தில் உயர்வதற்கு வழிவகுக்கப்பட்டது. இந்தி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட உத்திரபிரதேசம், மத்தியபிரதேசம் முதலான மாநிலங்களில் இருந்து பிழைப்புக்காக இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் தமிழ்நாட்டிற்குக் குடும்பம் குடும்பமாக வருகிறார்களே, அவர்களுக்கு இந்தி மொழி வாழ்வளிக்கவில்லை. தமிழ்மொழிதான் ஆங்கிலம்தான் அவர்களுக்கும் இன்று வாழ்வளிக்கும் உன்னத நிலையைப் படைத்துள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதனை ஒவ்வொரு மேடையிலும் எடுத்துச் சொல்கிறார்கள். ஒன்றிய அரசுக்கும் கடிதங்கள் வாயிலாக தெரிவிக்கிறார்கள். ஆனாலும், இந்தி மொழியுடன் சமஸ்கிருதத்தையும் திணிப்பதிலேயே குறியாக இருக்கிறது ஒன்றிய அரசு. ஆனாலும், அண்ணா அன்று வகுத்த சட்டம்தான் இன்று மட்டுமல்ல. என்றும் தமிழகத்தில் தொடரும் என்று முழங்குகிறார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்!

அண்ணாவின் புகழ் என்றும் நிலைத்து நிற்கும். ஏனெனில் இந்த மண்ணை வளப்படுத்திட தமிழ்நாட்டை முன்னேற்றிட, தமிழ்மக்களை உயர்த்திட தமிழ்மொழியைக் காத்திட அவர் காட்டிய வழி இணையற்றது. இன்று இந்தியாவின் ஏனைய மாநிலங்களிலும் எதிரொலிக்கிறது அந்த வழி! அந்த அற்புதமான வழியை நமக்கு உருவாக்கித் தந்த தமிழினப்பேரொளி பேரறிஞர் அண்ணா அவர்கள் மறைந்த நாள் இந்த நாள்.
1976 ஜனவரி 31 ! தமிழ்நாட்டில் நடைபெற்று வந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் தலைமையிலான அண்ணா அவர்களின் கழக அரசைக் கலைத்து விட்டு குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டது.
அத்துடன், அண்ணா அரசின் காவலர்களாகத் திகழ்ந்த தளகர்த்தகர்கள் எல்லாம் கைது செய்யப்பட்டு பிப்ரவரி 1, 2 ஆகிய நாள்களில் தமிழ்நாடு முழுவதிலும் சிறைகளில் அடைக்கப்பட்டார்கள்.
அவர்கள் யார் யார்?
கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டவர்கள் யார் யார் என்ற விவரம் கூட வெளியாகவில்லை. அந்நிலையில் பிப்ரவரி 3 ஆம் நாள் பேரறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் வந்தது.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் யார் யார் கைது செய்யப்பட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார்கள் என்ற விவரத்தைக் கூடச் செய்தித்தாள்கள் மூலம் தெரிவிக்க முடியாத அளவில் அன்றைய ஆளுநர் ஆட்சியில் செய்தித்தாள் தணிக்கை முறை கட்டுப்பாடுகள் இருந்தன.
ஒவ்வொரு மணித்துளியும் உயிரோடும் உணர்வோடும் ஒட்டி ஒன்றிப் பழகி வந்த உத்தம உடன்பிறப்புகள் எல்லாம் சிறைக் கொட்டடியில் வாட, உள்ளம் அனலாய்க் கொதித்த நிலையில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், யார் யார் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்ற விவரத்தை மக்களுக்கு மறைமுகமாகத் தெரிவிக்கும் வகையில் ஓர் அற்புதமான முடிவை மேற்கொண்டார்கள்!
அந்த முடிவுதான்!
பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அண்ணா நினைவிடத்திற்கு வரமுடியாதவர்கள் என்று ஒரு பட்டியலை முரசொலி இதழில் வெளியிட்டார்! அப்படி வரமுடியாதவர்கள் யார் யார்? அவர்கள்தான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். அதனால் தான் அவர்கள் அண்ணா அவர்களுக்கு அஞ்சலி செலுத்திட அண்ணா நினைவிடத்திற்கு வரமுடியாத நிலைக்கு ஆளானார்கள் என்று மறைமுகமாக வெளிப்படுத்தினார்கள். அதன்மூலம்தான் கைதுசெய்யப்பட்டவர்கள் யார் யார் என்பதைத் தமிழ்நாட்டு மக்கள் அறிய முடிந்தது!
இப்படி அன்று அண்ணா நினைவிடத்திற்கு வரமுடியாதவர்களில் ஒருவர்தான், இன்றைய நம்முடைய தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்!
ஆம். அன்று அந்தப் பட்டியலில் அவர் பெயரும் இடம்பெற்றிருந்தது சென்னை

சிறைச்சாலையில் அடைபட்டிருந்ததால்!
இன்று தமிழ்நாடு முதலமைச்சராக கழகத் தலைவர் .மு.க.ஸ்டாலின் அவர்கள் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57 ஆம் ஆண்டு நினைவு நாள் பேரணியைத் தலைமையேற்று, கழக முன்னணியினர், நிர்வாகிகள், உடன்பிறப்புகள் பல்லாயிரக்கணக்கில் உடன்வர, அண்ணா சிலையிலிருந்து அண்ணா நினைவிடம் வரை நடந்துவந்து, தமிழ்த்தாயின் தலைமகன் எனப் போற்றப்படும் பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தியாக வரலாற்றில் பேரறிஞர் அண்ணா அவர்களின் வரலாற்றோடு பின்னிப்பிணைந்துள்ள தியாக முத்திரையாகும் இது.






