
முரசொலி தலையங்கம் (02-02-2026)
சட்டம் ஒழுங்கு பற்றி பழனிசாமி பேசலாமா?
தினந்தோறும், 'நான் இருக்கிறேன்' என்பதைக் காட்டிக் கொள்வதற்காக அறிக்கை வெளியிட்டு வருகிறார் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி. தமிழ்நாடு அமைதியாக இருப்பதைப் பார்த்து அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதனால்தான், ‘சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது' என்று பீதியைக் கிளப்பி சமூக அமைதியைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்.
‘சட்டம் ஒழுங்கு கெட்டுப் போய்விட்டது' என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்லி, தான் சொன்னதை அவரே நம்பிக் கொண்டிருக்கிறார் பழனிசாமி.
சட்டம் ஒழுங்கைப் பற்றிப் பேசுவதற்கு பழனிசாமிக்கு எந்த அருகதையும் இல்லை. அதை தமிழ்நாடு பார்த்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகார பழனிசாமி, பொள்ளாச்சி பாலியல் வழக்கு விவகார பழனிசாமி, சாத்தான்குளம் கொடூரக் கொலை வழக்கு விவகார பழனிசாமி, கொடநாடு கொலை கொள்ளை வழக்கு விவகார பழனிசாமி என்று தான் பெயர். இப்படித்தான் அவர் தமிழ்நாட்டு மக்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.
பழனிசாமி ஆட்சி காலத்து நிலவரங்களை தமிழ்நாடு மறக்கவில்லை.
•கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த 11 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் மூன்று குற்றவாளிகள் உயிரிழந்ததோடு, 12 காவல் துறையினர், இரண்டு பொதுமக்கள் மற்றும் ஒரு குற்றவாளி என 15 பேர் காயமடைந்துள்ளனர்.
2020ஆம் ஆண்டு நடந்த ஐந்து துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஒரு குற்றவாளி உயிரிழந்ததோடு, இரண்டு காவல் துறையினர், ஒரு குற்றவாளி என மூன்று பேர் காயமடைந்துள்ளனர்.
2021ஆம் ஆண்டு நடந்த ஆறு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஐந்து குற்றவாளிகள் உயிரிழந்ததோடு, ஆறு காவல் துறையினர், இரண்டு குற்றவாளிகள் என எட்டு பேர் காயமடைந்துள்ளனர். இதுதான் பழனிசாமி ஆட்சி காலத்து சட்டம் ஒழுங்கு ஆகும்.
பழனிசாமி ஆட்சி காலத்தில் கடந்த 2018, 2019 மற்றும் 2929ஆம் ஆண்டு காலத்தில் சிறார்களுக்கு எதிராக 6 ஆயிரத்து 944 பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருப்பதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்தது.
மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு உள்துறை இணை அமைச்சர் அஜய்குமார் மிஸ்ரா எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2018 ஆம் ஆண்டில் ஆயிரத்து 881 வழக்குகளும், 2019ஆம் ஆண்டில் 2 ஆயிரத்து 216 வழக்குகளும், 2020ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 847 சிறார்களுக்கு எதிரான பாலியல் வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
அ.தி.மு.க. ஆட்சியில் பொள்ளாச்சியில் பாலியல் வன்கொடுமை தொடர்ந்து நடந்தது. அதன் மீது பழனிசாமி அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புகார் கொடுத்தார்கள். அப்படி புகார் கொடுத்தவர்கள் மிரட்டப்பட்டார்கள். தி.மு.க. மகளிரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்ட பிறகுதான் ஒருசிலர் கைது செய்யப்பட்டார்கள். கைது செய்யப்பட்டவர்களே போலீஸை மிரட்டினார்கள். சம்பந்தப்பட்ட ஒருவர், கலெக்டர் அலுவலக வாசலுக்கு வந்து பேட்டி கொடுத்தார். இன்னொருவர் முதலமைச்சர் பழனிசாமி பெயரைச் சொல்லி தனது செல்வாக்கை மீடியாவிடம் காட்டினார். இன்னொருவர் தனக்கும் அமைச்சர் வேலுமணிக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக காட்டிக் கொண்டார்.
இது பற்றி பத்திரிக்கையாளர்கள் அன்றைய முதலமைச்சர் பழனிசாமியைக் கேட்டார்கள். “அப்படியெதுவும் இல்லை, ஆதாரம் இருந்தால் கொடுங்கள்” என்ற மகா யோக்கியர்தான் இந்த பழனிசாமி. சி.பி.ஐ.க்கு வழக்கு ஒப்படைக்-கப்படும் வரை குற்றவாளிகளைக் காப்பாற்ற அ.தி.மு.க. அரசு முயற்சித்தது. இதுதான் பழனிசாமி ஆட்சி ஆகும்.

தூத்துக்குடியில் 13 உயிர்களை துள்ளத் துடிக்க சுட்டிக் கொல்ல உத்தரவிட்டவர்தான் இந்த பழனிசாமி.
‘தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி அப்போதைய முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ‘அந்த சம்பவத்தை மற்றவர்களைப் போல ஊடகங்களில் வந்த செய்தி மூலம் அறிந்து கொண்டேன்' என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
ஆனால் இந்த ஆணையத்திடம் மிக வலுவாக இருக்கும் ஆதாரம் என்னவென்றால், சாட்சியாக விசாரிக்கப்பட்ட அப்போதைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், அப்போதைய டி.ஜி.பி.ராஜேந்திரன், அப்போதைய உள- வுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தி ஆகியோர் தூத்துக்குடியில் நடக்கும் சம்பவங்களையும், அங்குள்ள நிலவரங்களையும் நிமிடத்துக்கு நிமிடம் எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து வந்ததாகக் கூறினார்கள்.
எனவே, ஊடகங்கள் மூலமாகத்தான் அந்த சம்பவம் பற்றி தெரிந்து கொண்டதாக எடப்பாடி பழனிசாமி கூறியது தவறான கருத்து என்பது இந்த ஆணையத்தின் கருத்தாகும்” - என்று நீதியரசர் அருணா ஜெகதீசன் ஆணையத்தின் இறுதி அறிக்கை சொல்கிறது. இத்தகைய பழனிசாமிதான் இப்போது சட்டம் ஒழுங்கைப் பற்றி பேசுகிறார்.
ஜெயலலிதாவின் பங்களாவில் கொலையும், கொள்ளையும் நடந்தது யார் ஆட்சியில்? பெண் போலீஸ் ஐ.ஜி.க்கே பாதுகாப்பு இல்லாத வகையில் ஆட்சி நடத்தியது யார்?கஞ்சா கடத்தல் அதிகமாக நடந்தது யார் ஆட்சியில்? அமைச்சரும், போலீஸ் அதிகாரிகளுமே மாமூல் பட்டியலில் இருந்தார்களே!
இதற்கெல்லாம் பதில் சொல்ல யோக்கியதை உண்டா பழனிசாமிக்கு?








