தமிழ்நாடு

அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.1.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், “இந்தியா உலகளாவிய கல்வி மாநாடு 2026” தொடக்க விழாவில் 'தமிழ்நாடு அறிவுசார் நகரம்' திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (29.1.2026) சென்னை, கலைவாணர் அரங்கத்தில், “இந்தியா  உலகளாவிய  கல்வி மாநாடு 2026” (India Global Education Summit 2026) தொடக்க விழாவில் 'தமிழ்நாடு அறிவுசார் நகரம்' (The Tamil Nadu Knowledge City) திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

மேலும், அறிவு, புதுமை மற்றும் திறன் மேம்பாட்டின் உலகளாவிய மையமாக தமிழ்நாட்டினை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளின் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மற்றும் விருப்பக் கடிதங்கள் (Letter of Intent) கையெழுத்திடப்பட்டன. 

திராவிட மாடல் அரசு வாய்ப்புகளுக்கான அணுகுமுறையை அனைவருக்கும் சமமாகப் பகிர்ந்தளித்து, கல்வி, சுகாதாரம் மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவற்றில் மற்ற மாநிலங்களைக் காட்டிலும் சிறந்த முன்னோடி திட்டங்களை செயல்படுத்தியதின் மூலம், தமிழ்நாடு தற்போது உற்பத்தித் துறையின் மையமாகவும், இந்தியாவின் கல்வித் தலைநகரமாகவும் திகழ்கிறது. உலகின் முதல் 50 பொருளாதாரங்களுக்கு நிகரான வலிமையுடன், 11.19 சதவிகிதம் என்ற இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டிய இந்தியாவின் ஒரே மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. 

இந்தியாவில் மிக வலுவான உயர்கல்வி கட்டமைப்பை கொண்ட மாநிலங்களில் ஒன்றாகவும், மிக உயர்ந்த மாணவர் சேர்க்கை விகிதத்தைக் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு திகழ்ந்து வருகிறது. தமிழ்நாடு அரசின் இலட்சியம் உலகளாவிய கல்வியில் பங்கேற்பது மட்டுமல்ல; அதில் தலைமை தாங்குவது ஆகும்.  அதனால் தான் இந்தியாவின் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த இந்திய உலகளாவிய கல்வி மாநாட்டை இந்தியாவில் முதல் முறையாக NISAU உடன் இணைந்து தமிழ்நாடு நடத்துகிறது. கல்வி, புத்தாக்கம், வேலைவாய்ப்பு மற்றும் உலகளாவிய கூட்டாண்மை ஆகிய அனைத்தும் ஒன்றிணையும் ஒரு தளமாக இந்த மாநாடு விளங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

தமிழ்நாடு அறிவுசார் நகரம் அடிக்கல் நாட்டுதல்

திருவள்ளூர் மாவட்டம், ஊத்துக்கோட்டை வட்டம், செங்காத்துகுளம், மேல்மளிகைப்பட்டு மற்றும் இனாம்பாக்கம் கிராமத்தில் 872 ஏக்கர் பரப்பில் அமைக்கப்படவுள்ள தமிழ்நாடு அறிவுசார் நகரத்திற்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அடிக்கல் நாட்டினார். 

உயர்கல்வி, ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, அறிவுசார்ந்த ஒரு சூழலை உருவாக்கி, தமிழ்நாட்டை அறிவுசார் சிறப்பிற்கான உலகளாவிய மையமாக நிலைநிறுத்துவதை நோக்கமாக கொண்டு தமிழ்நாடு அறிவுசார் நகரம் அமைக்கப்படவுள்ளது. 

இந்நகரம், தனித்தனி நிறுவனங்களின் தொகுப்பாக இல்லாமல், கல்வி, ஆராய்ச்சி மற்றும் தொழில் நிறுவனங்கள் தடையின்றி ஒன்றிணையும் ஒரு ஒருங்கிணைந்த நிலப்பரப்பாக இருக்கும். வரும் ஆண்டுகளில், உலகத்தரம் வாய்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள் மற்றும் புத்தாக்கக் குழுக்களுடன் இணைந்து 25,000-க்கும் மேற்பட்ட கற்பவர்களை இது உருவாக்கும்.

விருப்பக் கடிதங்கள் (Letter of Intent) கையெழுத்திடப்பட்டன. 

மெல்போர்ன் பல்கலைக்கழகம் - குவாண்டம் கணினி மற்றும் வேளாண் தொழில்நுட்ப துறைகளில் பயன்பாட்டு ஆராய்ச்சி மையத்தை 20,000 சதுர அடியில்  35 கோடி ரூபாய் முதலீட்டில் ஐந்து ஆண்டுகளில் Knowledge Corridor-ஐ நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 25 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 200 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

ஐஐடி சென்னை – மேம்பட்ட ஆட்டோமொட்டிவ் ஆராய்ச்சி மையம், மின்சார வாகனங்களுக்கான மாற்று ஆராய்ச்சி மையம் மற்றும் சோதனை ஆய்வகத்தை 40,000 சதுர அடியில் 200 கோடி ரூபாய் முதலீட்டில் Knowledge Tower-ல் நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன.  இதன்மூலம் 100 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 2,000 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

ஐஐடி சென்னை குளோபல் 20,000 சதுர அடியில் அடிப்படை மற்றும் பயன்பாட்டு ஆராய்ச்சி திறன் வசதி மையத்தை மேம்பட்ட திறன் மற்றும் புதுமையை முன்னெடுக்கும் வகையில் நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன.

ஆர்க்ஸீ, கார்பன் பிடிப்பு மற்றும் நிலைத்தன்மை துறையில் 10,000 சதுர அடியில் ஆராய்ச்சி ஆய்வகத்தை நிறுவிட விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன.

அக்யூமென், TIDCO உடன் இணைந்து 120 கோடி ரூபாய் முதலீட்டில் Knowledge City-யை மேம்படுத்தும் நோக்கில் கூட்டாண்மை திட்டங்களை செயல்படுத்த விருப்பக் கடிதம் கையெழுத்திடப்பட்டன. இதன்மூலம் 150 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 2,500 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்

தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுகூனம் (Guidance Tamil Nadu) உலகின் முன்னணி கல்வி நிறுவனங்களுடன் கீழ்கண்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன. 

ஐஐடி சென்னை குளோபல் - உலகளாவிய திறன் மேம்பாடு, AI மற்றும் செமிகண்டக்டர் துறைகளில் மேம்பட்ட திறன் பயிற்சி மற்றும் ஸ்டார்ட்அப் புதுமை முன்னேற்றத்திற்கான கூட்டாண்மை திட்டங்களுக்கு வழிவகை செய்திடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இலினாய்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி - சென்னையில் மேம்பட்ட உற்பத்தி, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் Health-AI துறைகளில் சிறப்பு மையத்தை நிறுவிட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

அறிவுசார் நகரத்தை நோக்கி தமிழ்நாடு - முன்னணி கல்வி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம் உடன் இணைந்து, உலகத் தமிழ் ஆராய்ச்சி கூட்டாண்மையில் வரலாற்று ஆவணங்களை டிஜிட்டல் வடிவில் மாற்றுதல், மொழி கற்றல் வளங்களை விரிவாக்குதல் மற்றும் கல்வி பரிமாற்றத்தை ஊக்குவிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

Chartered Institute of Procurement and Supply Tier 2 மற்றும் Tier 3 நகரங்களில் கிளை அலுவலகங்களை நிறுவி, நிறுவன வலையமைப்புகளை புதிய வாய்ப்புகளுடன் இணைக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அடோப் உயர்கல்வி மாணவர்களுக்கு இலவச Creative AI உரிமங்களை வழங்கி, இளைஞர்களை அதிநவீன டிஜிட்டல் கருவிகள் பயன்பாட்டில் வலுப்படுத்திட புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

TIDCO நிறுவனம், University of East London உடன் புதுமை மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

NISAU உடன் திறன் மேம்பாட்டை வலுப்படுத்தவும், TIDCO திட்டங்களில் கூட்டாண்மையால் முதலீட்டை ஈர்க்க வழிவகை செய்திடவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 

இந்த இந்தியா  உலகளாவிய  கல்வி மாநாட்டில், 5 விருப்பக் கடிதங்கள் (Letter of Intent) கையெழுத்திடப்பட்டு, 8 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, மொத்தம் 355 கோடி ரூபாய் முதலீட்டு மதிப்புடன், 2,255 நபர்களுக்கு நேரடி வேலைவாய்ப்புகளும், 9,650 நபர்களுக்கு மறைமுக வேலைவாய்ப்புகளும் கிடைக்கும்.

banner

Related Stories

Related Stories