
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (27.1.2026) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கருப்பைவாய்ப் புற்றுநோயை தடுத்திடும் வகையில் முதற்கட்டமாக தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய நான்கு மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 14 வயதுடைய 30,209 மாணவிகளுக்கு HPV (Human Papilloma Virus) தடுப்பூசி வழங்கிடும் திட்டத்தினை தொடங்கி வைத்தார். மேலும், தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் செயல் திட்ட ஆவணத்தை வெளியிட்டார்.
தமிழ்நாட்டில், ஆறு நோய்களை தடுப்பதற்கான விரிவுபடுத்தப்பட்ட தடுப்பூசி திட்டம் 1978-இல் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவதற்காக, நாடு தழுவிய தடுப்பூசி திட்டம் 1985-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.
தடுப்பூசி திட்டத்தின் கீழ், 11 வகையான தடுப்பூசிகளை கர்ப்பிணித் தாய்மார்களுக்கும், குழந்தைகளுக்கும் அளித்து 12 வகையான தடுப்பூசியினால் தடுக்கப்படக்கூடிய நோய்களிலிருந்து பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் ஆண்டுதோறும் சுமார் 1.2 இலட்சம் பெண்களுக்கு கருப்பைவாய்ப் புற்றுநோய் புதிதாக கண்டறியப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பெண்களை பாதிக்கும் புற்றுநோய்களில் மார்பக புற்றுநோய்க்கு அடுத்தபடியாக, கருப்பைவாய் புற்றுநோய் கண்டறியப்பட்டு வருகிறது. ஹெச்.பி.வி வைரஸ் (HPV - Human Papilloma Virus) தொற்றின் காரணமாக ஏற்படும் கருப்பைவாய் புற்றுநோயை ஹெச்.பி.வி தடுப்பூசி செலுத்துவதின் மூலம் தடுக்க இயலும்.

HPV (Human Papilloma Virus) தடுப்பூசி வழங்கிடும் திட்டத்தினை தொடங்கி வைத்தல்
தமிழ்நாடு அரசின் 2025-2026 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், கருப்பைவாய் புற்றுநோயை தடுக்கவும், தமிழ்நாட்டில் அந்நோயினை அறவே அகற்றிடவும் HPV (Human Papilloma Virus) தடுப்பூசியை 14 வயதுடைய அனைத்து பெண் குழந்தைகளுக்கும் படிப்படியாக வழங்க அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென 2025 – 26 ஆம் ஆண்டில் 36 கோடி ஒதுக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
அந்த அறிவிப்பின் தொடர்ச்சியாக, தடுப்பூசி திட்டத்தினை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்த 14 வயதுடைய 3,38,649 பெண் குழந்தைகளுக்கு HPV தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, முதற்கட்டமாக (Pilot phase) கருப்பை வாய் புற்றுநோய் பாதிப்பு அதிகம் உள்ள தர்மபுரி, பெரம்பலூர், திருவண்ணாமலை மற்றும் அரியலூர் ஆகிய 4 மாவட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அம்மாவட்டங்களில் உள்ள அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் 30,209 மாணவிகளுக்கு HPV (Human Papilloma Virus) தடுப்பூசி வழங்கிடும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்றையதினம் தொடங்கி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, மாநிலம் முழுவதும் உள்ள எஞ்சிய மாவட்டங்களில் உள்ள 14 வயதுடைய பெண் குழந்தைகளுக்கு இத்தடுப்பூசி செலுத்தப்படும்.
தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்க செயல்திட்ட ஆவணம் வெளியீடு (Tamil Nadu Cancer Care Mission)
புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பை மேம்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த சில ஆண்டுகளாக தொடர்ந்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கட்டமைப்பு மேம்பாடு, ஆரம்பநிலை புற்றுநோய் கண்டறிதல், மற்றும் மேம்பட்ட சிகிச்சை வழங்குதல் உட்பட பல்வேறு அம்சங்கள் இதில் அடங்கும்.
புற்றுநோய் என்பது மக்களின் நலத்திற்கு பெரும் தீங்காக இருந்து வருகிறது. குறிப்பாக, வாழ்க்கைமுறை சார்ந்த மாற்றங்களால் ஏற்படும் புற்றுநோய்கள் அதிகரித்து வருவதால், ஒருங்கிணைக்கப்பட்ட விரிவான அணுகுமுறையை செயல்படுத்துவது அவசியமாகிறது.
தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ள தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கமானது நோய் தடுப்பு, ஆரம்பநிலையில் கண்டறிதல், நோயறிதல், சிகிச்சை, வலி நிவாரண சிகிச்சை நீடித்த மற்றும் தரமான வாழ்வு ஆகியவற்றை உள்ளடக்கி, விரிவுபடுத்தி புற்றுநோயால் ஏற்படும்
முன்கூட்டியே நிகழும் இறப்புகளைக் குறைப்பதை நோக்கமாக கொண்டுள்ளது.
ஒருங்கிணைந்த இந்த இயக்கத்தில், மேம்பட்ட தொழில்நுட்பங்கள், சமூகப் பங்களிப்பு மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி ஆகியவற்றைப் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
புற்றுநோய் தாக்கத்தை குறைப்பதை நோக்கமாகக் கொண்ட இந்த புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் மூலம் வரும் 5 ஆண்டுகளில் பல தொலைநோக்கு மற்றும் புதுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசு திட்டமிட்டுள்ளது. இதன் முதல் நடவடிக்கையாக தமிழ்நாடு புற்றுநோய் தடுப்பு மற்றும் பராமரிப்பு இயக்கத்தின் செயல் திட்ட ஆவணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் இன்றையதினம் வெளியிட்டார்.








