
தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்றி விட வேண்டும் என்று பாஜக பல்வேறு வகையில் முயன்று வரும் நிலையில், அவதூறு பரப்புவதையே வாடிக்கையாக வைத்துள்ளது. குறிப்பாக அண்ணாமலை, எச்.ராஜா, தமிழிசை இவர்களெல்லாம் திமுக அரசுக்கு அவதூறு பரப்பி, மக்களை முட்டாளாக்க முயன்று வருகின்றனர். ஆனால் இவர்களெல்லாம் 'டம்மி பாவா..' என்று சொல்வது போல், மக்களே இவர்களை ஒரு பொருட்டாக மதிக்கவில்லை.
இவர்கள் பரப்பும் அவதூறுக்கு மக்களே பதிலடி கொடுத்து வரும் நிலையில், தற்போது தமிழிசை சௌந்தரராஜன் எல்லாம் தெரிந்தவர் போல் பிதற்றி, பாஜகவுக்கு ஒன்றும் தெரியவில்லை என்று மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளார்.
அதாவது மாணவர்களுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் லேப்டாப் வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார். இதற்காக DELL, HP, Acer உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்து லட்சக்கணக்கில் லேப்டாப்களை கொள்முதல் செய்துள்ளது. பலரும் இதற்கு வரவேற்பு அளித்து வரும் நிலையில், இதிலும் வழக்கம்போல் பாஜக அரசியல் செய்ய விரும்பி விமர்சனங்களை வைத்துள்ளது.

அந்த வகையில் பாஜகவை சேர்ந்த முன்னாள் ஆளுநர் தமிழிசை, "மாணவர்களுக்கான 10 லட்சம் லேப்டாப்களை உலகத் தரம் வாய்ந்த நிறுவனங்களிடம் இருந்து வாங்கியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் சொல்கிறார். நம் தமிழரான ஷிவ் நாடார், தனது HCL கம்பெனியில் இருந்து திருச்செந்தூருக்கு ரூ.300 கோடியை கொடுத்திருக்கிறார். உலகத்தரம் வாய்ந்த லேப்டாப் அங்கு இல்லையா? உலகத்தரம் வாய்ந்தது என்றால் எதை குறிப்பிடுகிறீர்கள்?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்த சூழலில் HCL நிறுவனம், லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் தயாரிப்பதை 10 ஆண்டுகளுக்கு முன்பே நிறுத்திவிட்டதாக இணையவாசிகள் கிண்டலடித்து வருகின்றனர். அதாவது கடந்த 2013 - 2014 ஆம் ஆண்டிலேயே HCL நிறுவனம் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர் தயாரிப்பதை நிறுத்த முடிவெடுத்துவிட்டது. தற்போது இந்நிறுவனத்தின் லேப்டாப்கள் எதுவும் புதிதாக வாங்க முடியாது. ஆனால் பழைய சாதனங்களை கடைகளில் பெற முடியும்.

இது எதுவுமே தெரியாமல் தமிழிசை பேசியதற்கு இணையவாசிகள் பல்வேறு விமர்சனங்களை வைத்து வருவதோடு, கிண்டலடித்தும் வருகின்றனர். கடந்த செப்டம்பர் மாதம் கூட ஒன்றிய அரசு GST குறைத்த நிலையில், ஆவின் பாலகத்துக்கு வந்து, ”பால் விலையை ஏன் குறைக்கவில்லை?” என்று கேள்வி எழுப்பினர் தமிழிசை.
இதில் வேடிக்கை என்னவென்றால், அனைத்து வகையான பால் (Fresh Milk) பாக்கெட்டுகளுக்கும் ‘GST விலக்கு’ நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில், பாலுக்கு ஏன் விலையை குறைக்கவில்லை என்று தமிழிசை கேட்டதை பலரும் கிண்டலடித்து வந்தனர். தற்போது மேலும் ஒரு விவகாரத்தில் சிக்கியுள்ளார் தமிழிசை.






