
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (5.12.2025) திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவினை திறந்து வைத்தார்.
திருவண்ணாமலை - திருக்கோவிலூர் சாலையில் நெடுஞ்சாலைத்துறையால் அமைக்கப்பட்டுள்ள மு.க.ஸ்டாலின் சுற்றுச் சூழல் சுற்றுலா பூங்காவானது, எடப்பாளையம் ஏரியை தூர்வாரி, நிலத்தடி நீர் உயரும் வகையில் மழைநீர் சேகரிக்கும் அமைப்பாக 33 ஏக்கர் பரப்பளவில் உருவாக்கப்பட்டுள்ளது.
ஏரியின் உபரிநீர் வெளியேறும் சிறிய பாலத்தில் வில்நாண் (Bow String) வடிவில் வண்ண மின்விளக்குகளால் ஒளிரக்கூடிய வகையிலான அமைப்பு மக்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
சுற்றுசூழலை கருத்தில்கொண்டு மண்அரிப்பு மற்றும் சரிவுகளை தடுக்க ஏரியின் கரைகள் இயற்கை முறையில் வெட்டிவேர் பயன்படுத்தி நவீன முறையில் வலுபடுத்தப்பட்டுள்ளது.
இப்பூங்காவில் அக்குபிரஷர் தன்மையுடைய (Reflexology method)ல் நடைபாதை 2.00 கி.மீ. துாரத்திற்கு அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடுவதற்காக தனியாக இடம் ஒதுக்கப்பட்டு விளையாட்டு உபகரணங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைவரும் அணுகக்கூடிய வகையில் திறந்தவெளி உடற்பயிற்சி மேற்கொள்வதற்கு ஆண்கள், பெண்கள் என இருவருக்கும் தனித்தனியாக உடற்பயிற்சி சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஏரிக்கரையைச் சுற்றி இயற்கை எழில் கொஞ்சும் பல வகையான நாட்டு மரக்கன்றுகள் மற்றும் மலர் செடிகள் நடப்பட்டுள்ளதுடன், ஏரிக்கரையை சுற்றி நவீனமுறையில் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
நடைபாதை முழுவதும் மெல்லிய இசையுடன் (Music Therapy) மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ள ஏதுவாக ஒலிபெருக்கிகளும், ஓய்வெடுக்க அங்காங்கே நவீன நிழற்குடைகளும் அமைக்கப்பட்டுள்ளன.
பொதுமக்களின் பாதுகாப்பிற்காக நடைபாதையை சுற்றிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப் பட்டுள்ளதுடன், பூங்காவிற்கு வரும் மக்களின் வாகனங்கள் பாதுகாப்பாக நிறுத்துவதற்கு வாகன நிறுத்துமிடமும் அமைக்கப்பட்டுள்ளது.
பூங்காவிற்கு வரும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்றுதிறனாளிகள் பயன்படுத்தும் வகையிலான நவீன கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளன.






