
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.12.2025) தலைமைச் செயலகத்தில், எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறையில் பணிபுரியும் பணியாளர்களுக்காக சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் 39 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் கூடிய 96 குடியிருப்புகளுடன் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர் குடியிருப்பினை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2022-2023-ஆம் ஆண்டுக்கான எழுதுபொருள் மற்றும் அச்சுத்துறை மானியக் கோரிக்கையில், அரசு அச்சகப் பணியாளர்களுக்கு சென்னை, தண்டையார்பேட்டை – காமராஜர் நகரில் நவீன வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் கட்டித் தரப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அந்த அறிவிப்பிற்கிணங்க, சென்னை, தண்டையார்பேட்டை, காமராஜர் நகரில் 39 கோடியே 30 இலட்சம் ரூபாய் செலவில் 79,000 சதுரடி பரப்பளவில், 96 குடியிருப்புகளுடன், தரை மற்றும் ஆறு தளங்களுடன் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு அச்சகப் பணியாளர் குடியிருப்பினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்து, பணியாளர்களுக்கு குடியிருப்பு ஒதுக்கீட்டிற்கான ஆணைகளை வழங்கினார்.
இக்குடியிருப்பின் தரைத்தளத்தில் வாகன நிறுத்துமிடம், மாற்றுத்திறனாளிகளுக்கான சாய்வுதளம், முதல் தளம் முதல் ஆறாம் தளம் வரை உள்ள ஒவ்வொரு குடியிருப்பும் தலா 450 சதுரடியுடன், குடியிருப்புகளுக்கு தேவையான மின் இணைப்பு, மின்தூக்கி வசதி, தீயணைப்பு உபகரணம், குடிநீர் வசதி, கழிவுநீர் இணைப்பு, உட்புற அணுகுசாலை, தெரு விளக்கு, சுற்றுச்சுவர் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.








