
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை 17.10.2025 அன்று தலைமைச் செயலகத்தில், பஞ்சாப் மாநில பொதுப்பணித் துறை அமைச்சர் எஸ். ஹர்பஜன் சிங் மற்றும் பஞ்சாப் மாநில நீர்வளத்துறை அமைச்சர் பிரேந்தர் குமார் கோயல் ஆகியோர் சந்தித்து;
பஞ்சாப் மாநில அரசின் சார்பில் ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள ஒன்பதாவது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவிற்கு வருகை தந்து சிறப்பிக்க வேண்டுமென்று அழைப்பு விடுத்தனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பாக அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோரை அவ்விழாவில் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில், நேற்று (23.11.2025) ஸ்ரீ ஆனந்த்பூர் சாஹிப்பில் நடைபெற்ற ஒன்பதாவது சீக்கிய குரு ஸ்ரீ குரு தேக் பகதூர் அவர்களின் உயர்ந்த தியாகத்தின் 350-வது ஆண்டு விழாவில், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்துகொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய வாழ்த்துக் கடிதம் மற்றும் நினைவுப் பரிசினை பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அவர்களிடம் வழங்கினார்கள்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பஞ்சாப் மாநில முதலமைச்சர் பகவந்த் மான் அவர்களுக்கு எழுதிய வாழ்த்துக் கடிதத்தில்,
குரு தேக் பகதூர் ஜியின் 350வது தியாகிகள் தின நினைவேந்தல் விழாவில் கலந்துகொள்ளுமாறு தனக்கு அளித்த அழைப்பிற்கு மீண்டும் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும்;
இந்த முக்கியமான நிகழ்வை சிறப்பிக்கும் வகையில், மாண்புமிகு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி அவர்களையும் தனது சார்பாக இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொண்டதாகவும், அவர்களை அன்புடன் வரவேற்க முன்வந்த தங்கள் நல்லெண்ணத்திற்கு நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும், உங்களிடம் வழங்குவதற்கு அவர்களிடம் அளித்துள்ள நினைவுப் பரிசினை அன்புடன் ஏற்றுக்கொள்ளுமாறும் வேண்டுகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
விழா மிகச் சிறப்பாக நடைபெற தனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்வதோடு, குரு தேக் பகதூர் அவர்கள் நிலைநாட்டிய துணிச்சல், கருணை மற்றும் மதச் சுதந்திரம் ஆகிய உன்னத இலட்சியங்களுக்கு தனது மரியாதையையும் ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.






