
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் வட்டம், விளாத்திகுளம் கிராமம், வேம்பார் சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தூத்துக்குடி மாவட்டம், எட்டையபுரம் வட்டம், வேலிடுபட்டி கிராமத்தில் வசிக்கும் திருமதி. மாரியம்மாள் க/பெ.வலியன் என்பவர் விளாத்திகுளம் பேரூராட்சியில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் தூய்மைப் பணியாளராக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 05.11.2025 அன்று விளாத்திகுளம் வட்டம், விளாத்திகுளம் கிராமம், வேம்பார் சாலையில் உள்ள நீர்த்தேக்கத் தொட்டி அருகில் விளாத்திகுளம் வளமீட்புப் பூங்காவை நோக்கிச் சென்றுகொண்டிருந்தபோது பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக மோதியதில் மாரியம்மாள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.
மேலும், இந்த விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, உயிரிழந்த மாரியம்மாள் அவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளேன்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.






