
தமிழ்நாட்டுக்கு எதிராகவும், தமிழர்களுக்கு எதிராகவும் பாஜகவினர் தொடர்ந்து வெறுப்பு பேச்சை பேசி வரும் நிலையில், தற்போது மீண்டும் பிரதமர் மோடி வெறுப்பை அள்ளி வீசியுள்ளார். பீகார் தேர்தல் பிரச்சாரத்தின்போது, பீகாரிகள் தமிழ்நாட்டில் தொடர்ந்து துன்புறுத்தப்பட்டு வருவதாக பேசினார்.
மோடியின் இந்த பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் இருக்கும் நிலையில், தமிழ்நாட்டு மக்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த சூழலில் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாவது :-
பிரதமர் மோடி பீகார் தேர்தல் பிரச்சாரத்தின் போது, இந்தியா கூட்டணியின் வெற்றியை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை தாங்கிக் கொள்ள முடியாமல், வழக்கமாக மேற்கொள்கின்ற பொய்ப் பிரச்சாரத்தை அங்கும் அரங்கேற்றியுள்ளார். பிரதமர் மோடியின் பேச்சு, பீகார் மாநில மக்களிடையே தமிழர்கள் மீது அவநம்பிக்கையையும், விரோத மனப்பான்மையையும் ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது.
உத்தர பிரதேசம், பீகார், ஒரிசா உள்ளிட்ட பல வட மாநிலங்களைச் சேர்ந்த மக்கள் தமிழ்நாட்டில் அமைதியாகவும், நிம்மதியாகவும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால், பொய் பிரச்சாரத்தின் மூலமாக வாக்குகளைப் பெற்றுவிடலாம் என்ற குறுகிய மனப்பான்மையில் பிரதமர் செயல்படுகிறார். ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க வேண்டிய இடத்திலும், பிளவுகளைச் சரிசெய்ய வேண்டிய இடத்திலும் தான் பிரதமர்கள் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதாரண நகராட்சி உறுப்பினருக்குக் கூட, ஜாதியின் பெயராலோ, மொழியின் பெயராலோ, மதத்தின் பெயராலோ, மாநிலத்தின் அடிப்படையிலோ பிரச்சனைகளைப் பேசுகின்ற குறுகிய மனப்பான்மை ஏற்படாது. இத்தகைய எண்ணம் பிரதமருக்கு ஏற்பட்டிருப்பது வருந்தத்தக்கது.
இது மோடிக்கு புதிதல்ல, ஒவ்வொரு சட்டமன்றத் தேர்தலிலும் ஆங்காங்கே போய் இப்படி "புளுகு மூட்டைகளை அவிழ்த்து விடுவது" பாரதிய ஜனதாவுக்கும் குறிப்பாக மோடி மற்றும் அமித் ஷாவுக்கும் கைவந்த கலை. அவர்கள் இருவரும் ஒருவர் ஒருவரை மிஞ்சுகிற வகையில் பொய் சொல்வதில் வல்லவர்கள்.
ஒடிசாவில் சட்டமன்றத் தேர்தல் நடந்தபோது, பூரி ஜெகந்நாதர் கோவிலின் சாவி தமிழ்நாட்டிடம் இருக்கிறது என்று சொல்லி, தமிழர்கள் எல்லாம் திருடர்களைப் போல ஒடிசா மக்கள் மத்தியில் சித்தரித்துக் காட்டினார் மோடி. அதை மிஞ்சும் வகையில் அமித் ஷா, "இங்கே வி.கே. பாண்டியன் என்கிற ஒரு தமிழன்தான் ஆட்சி புரிகிறார். ஒரிசாவில் இருப்பவர்களுக்கு கொஞ்சம்கூட வெட்கம் இல்லையா? மானம் இல்லையா? ஒரு தமிழ்நாட்டுக்காரன்தான் இந்த மாநிலத்தை ஆள வேண்டுமா?" என்று கேட்டார்.
இதேபோலத்தான் ஒரிசா தேர்தலுக்கு எப்படி ஒரு தமிழரை இழிவுபடுத்திப் பேசினார்களோ, அதேபோல பீகாரில் தமிழ்நாட்டையும், தமிழர்களையும், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தையும், தளபதி மு.க.ஸ்டாலினையும் மையப்படுத்தி மோடி பேசியிருக்கிறார். இந்த தமிழ்நாட்டில் எங்கேயாவது பீகார் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் தாக்கப்பட்டதற்குரிய ஆதாரம் இருந்தால், அவர் வழக்கு போடட்டும்.
இதேபோல்தான், 2023ஆம் ஆண்டு ஒரு பொய்யான கூச்சலைத் தமிழ்நாட்டில் கிளப்பினார்கள். அதாவது, தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு, பீகார் மாநில மக்கள் தாக்கப்படுவதாகப் பொய்யான செய்திகள் யூடியூப்பில் வெளியிடப்பட்டன. இது சம்பந்தமாக பீகாரைச் சார்ந்த இருவர் கைது செய்யப்பட்டு, அவர்கள் மீது வழக்கும் தொடரப்பட்டது.

இந்தச் செய்தி வந்தவுடன், பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார் ஒரு சிறப்புப் படையைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பினார். அந்தப் படை, பீகாரிகள் தாக்கப்படுவது உண்மையா என்று நேரடியாக வந்து ஆய்வு செய்தது. அந்த ஆய்வு அறிக்கை என்னவென்றால், "தமிழ்நாட்டில் பீகாரிகள் நிம்மதியாகவும், சிறப்பாகவும், எந்தவிதமான பாதிப்பும் இல்லாமல் வாழ்கிறார்கள்," என்று கூறியது.
ஆனால், பிரதமராக இருப்பவர் இதைப் புரிந்துகொள்ளாமல் பொய் சொல்கிறார் என்றால், இது ஒவ்வொரு குடிமகனும் தலைகுனியக்கூடிய அளவுக்கு இருக்கிறது. ஒன்றிய கல்வித்துறை அமைச்சராக இருக்கக்கூடிய தர்மேந்திர பிரதான், தமிழ்நாட்டுக்காரனுக்கு "நாகரிகமே கிடையாது" என்று சொன்னார்.
அமெரிக்காவில் கருப்பினத்தவர்கள் தாக்கப்படுவதை போல இங்கேயும் தாக்கப்படுகிறார்கள் என்று சொன்னபோது, அதற்கு ஒரு பாஜக எம்.பி. பகிரங்கமாக, "நாங்கள் அப்படி கிடையாது; தென்னாட்டைச் சார்ந்தவர்கள் எல்லாம் கருப்பாய் இருக்கிறார்கள், அவர்களோடு நாங்கள் வாழவில்லையா?" என்று தென் மாநிலத்தவர்களை எல்லாம் இழிவுபடுத்திப் பேசினார்
பெங்களூரில் 'ராமேஸ்வரம் கஃபே' என்ற ஒரு உணவகம் தாக்கப்பட்டபோது, ஒரு பிஜேபி பெண் அமைச்சர், "தமிழ்நாட்டுக் காரன் தான் இதைச் செய்திருக்க வேண்டும்" என்று சொன்னார். தமிழன் என்றால் இவ்வளவு கேவலமா?

திமுக கூட்டணி நாற்பதற்கு நாற்பது இடங்களிலும் வெற்றி பெற்றதற்காக, கொடுக்க வேண்டிய நிதியும், கல்வித்துறைக்கு கிடைக்க வேண்டிய பணமும் மத்திய அரசால் கொடுக்கப்படவில்லை. தமிழ்நாட்டிற்குக் கொடுப்பதற்குப் பதிலாக, நாங்கள் செலுத்தும் ஒரு ரூபாய்க்கு 29 காசுகள்தான் திருப்பித் தரப்படுகிறது. ஆனால், பீகாருக்கு ஒரு ரூபாய்க்கு 7 ரூபாய்கள் வரை கொடுக்கிறார்கள்.
இருப்பினும், மோடி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது பழி சொல்ல எண்ணுகிறார். ஏனென்றால், நிதியைக் கொடுக்காமலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட ஆட்சி 11.19% பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்றிருக்கிறது. பீகாரை 15 முதல் 20 ஆண்டுகாலம் ஆண்ட பிஜேபியாலும், அதன் கூட்டணியாலும் அங்கே வளர்ச்சி ஏற்படவில்லை. இதை மக்கள் கேட்கப் போகிறார்கள் என்பதற்காகவே மோடி இப்படி திசை திருப்புகிறார்.
பீகாரைச் சார்ந்த ஜியா குமாரி என்கிற பெண்மணி, சென்னைக்கு அருகே இருக்கும் கவுல்பஜார் அரசுப் பள்ளியில் படித்து 10ஆம் வகுப்பில் தமிழில் 100-க்கு 93 மதிப்பெண்கள் வாங்கி, தான் இங்கேயே படித்து மருத்துவராக வேண்டும் என்று பேட்டி கொடுத்திருக்கிறார்.
மேலும், ஒரு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில், வடநாட்டைச் சேர்ந்த ஒரு பெண்மணி, கொரோனா நேரத்தில் தனது குழந்தைகள் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது, பக்கத்து வீட்டு தமிழ் தாய்மார்கள் வந்து குழந்தையைக் காப்பாற்றியதால் தான், அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்றும், இது "எங்கள் ஊரில் நடந்திருந்தால் இந்தக் குழந்தைகளை நான் இழந்திருப்பேன்" என்றும் கூறியுள்ளார்.
திமுக இந்தி திணிப்பைத் தான் எதிர்த்தது, எந்த காலத்திலும் இந்தி மொழியையோ, இந்திக்காரர்களையோ எதிர்த்ததில்லை. சென்னையில் 30-40% மக்கள் பிற மாநிலங்களைச் சார்ந்தவர்கள் வசதி வாய்ப்போடு இருக்கிறார்கள். தொழிலாளர்களும் நிம்மதியாக, எந்தவிதமான கவலையும் இல்லாமல் இரவு நேரத்தில் கூட வேலை செய்துவிட்டுச் செல்கிறார்கள்.

இவ்வளவு பாதுகாப்பாக ஆட்சி நடத்துகிற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மீது திட்டமிட்டு பிரதமர் மோடி பேசியிருப்பதை திராவிட முன்னேற்றக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. ஒவ்வொரு தமிழரும் இதை உணர்ந்து மோடிக்கு எதிரான கண்டனக் குரலை எழுப்புவார்கள்.
பிரதமர் மோடியால் செய்ய முடியாத திட்டங்களை எல்லாம் ஒரு மாநிலத்தினுடைய முதலமைச்சர் செய்து இந்தியா முழுக்க ’ஃபேமஸ்’ ஆகி வருகிறார். கலைஞர் உரிமைத் தொகை போன்ற திட்டங்களை இந்தியாவிற்கே வழிகாட்டியாகத் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் செய்திருக்கிறார்.
மேலும், பெரியாருடைய கருத்துகள் இந்தியா முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. டெல்லி பல்கலைக்கழகத்தில், பெரியாருடைய விழா நடப்பது, முதலமைச்சராக மு.க. ஸ்டாலின் அவர்கள் வந்த பிறகுதான் நடக்கிறது. இந்த பொறாமை பயத்தின் காரணமாகத்தான் மு.க. ஸ்டாலின் அவர்கள் மீது குறிவைத்து, "ஆப்ரேஷன் எம்.கே.எஸ்" என்ற அடிப்படையில் ஆரம்பித்துவிட்டார்கள். இதையெல்லாம் சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது.
பீகார் மக்கள் ஏமாற மாட்டார்கள். ஏனென்றால், நாடாளுமன்றத் தேர்தலில் மோடி எட்டு முறை தமிழ்நாட்டிற்கு வந்து பிரசாரம் செய்தும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் செல்வாக்கோ, திமுக கூட்டணினுடைய செல்வாக்கோ குறையவில்லை. ஒழுங்காக பீகாரில் வேலைவாய்ப்பை அளித்திருந்தால், அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஏன் வரப்போகிறார்கள்? நீங்கள் உங்கள் மக்களைக் காப்பாற்றத் தவறியதற்கு எங்கள் மீது பழி போடுவதா? தமிழ் மண் பீகார் மக்களைக் காப்பாற்றுகிற மண்" என்றார்.






