தமிழர்களின் பாரம்பரியத்தையும், தொன்மையையும் பறைசாற்றும் வகையில், சிவகங்கை மாவட்டம் கீழடியில் 9 கட்டங்களாக அகழாய்வு பணிகள் நடைபெற்றுள்ளன. இந்த ஆய்வு மேற்கொண்ட பிறகுதான், கீழடியில் தமிழர்கள் பயன்படுத்திய மண்சுவடுகள், குண்டங்கள், கலைப்பொருட்கள், செங்கல் கட்டுமானங்கள் உள்ளிட்ட 13 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
இதையடுத்து தமிழர்களின் பெருமைகளை உணர்த்தும் வகையில் 7 ஆம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்த இடத்தில், தமிழ்நாடு அரசு சார்பில் ரூ.17.80 கோடியில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் பலரும் பார்வையிட்டு வருகிறார்கள்.
இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில், நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்றுவிட்டு மதுரை வந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டார்.
இதையடுத்து கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமையுன் சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில்,”திறந்து வைத்த 30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களைக் கவர்ந்துள்ளது கீழடி அருங்காட்சியகம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பது கண்டு வியப்பதை இன்று திடீர் ஆய்வுக்காக அங்குச் சென்றபோது அறிந்துகொண்டேன்.
கீழடி திறந்தவெளி அருங்காட்சியகமும் வரும் ஜனவரியில் திறக்கப்பட இருக்கிறது. பொருநை அருங்காட்சியகம் வரும் டிசம்பரிலேயே மக்கள் பார்வைக்குத் திறக்கப்பட உள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தில் மற்றுமொரு அருங்காட்சியகம் எழுந்து வருகிறது.
பூம்புகார் ஆழ்கடல் ஆய்வுகள் தொடங்கிவிட்டன. நிலத்திலும், நீரிலும், இலக்கியத்திலும் ஆய்ந்து, இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாறு தமிழ்நிலத்திலிருந்து தொடங்கித்தான் எழுதப்பட வேண்டும் என்பதை உறுதிசெய்து வருகிறது நமது திராவிட மாடல் அரசு” என தெரிவித்துள்ளார்.