தமிழ்நாடு

ஆதவ் அர்ஜூனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

வன்முறையை தூண்டும் வகையில் எக்ஸ் தளத்தில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆதவ் அர்ஜூனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம் : சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கரூரில் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக காவல் துறையினர், இருவரை கைது செய்துள்ளது. இதுசம்பந்தமாக அந்த கட்சியின் தேர்தல் குழு பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, தனது எக்ஸ் தள பக்கத்தில், இலங்கை, நேபாளத்தை போல புரட்சி வெடிக்கும் எனக் கருத்துக்களை பதிவிட்டிருந்தார்.

தேச பாதுகாப்புக்கும், நல்லிணக்கத்துக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் வகையிலும், வன்முறையை தூண்டும் வகையிலும் கருத்து பதிவிட்ட ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுக்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி, சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த எஸ்.எம்.கதிரவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதி என்.செந்தில்குமார் முன், விசாரணைக்கு வந்த போது, ஆதவ் அர்ஜுனா மீது ஏற்கனவே வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதால், இந்த மனு செல்லத்தக்கதல்ல என காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஆதவ் ஆர்ஜூனாவின் எக்ஸ் தள பக்க பதிவுகளும் நீதிபதியிடம் காட்டப்பட்டன. இதையடுத்து, ஒரு சின்ன வார்த்தையும் பெரிய பிரச்சனை ஏற்படுத்திவிடும். இவர்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்களா? நடவடிக்கை எடுக்க நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறீர்களா என கேள்வி எழுப்பிய நீதிபதி, புரட்சி ஏற்படுத்துவது போல கருத்துக்களை பதிவிட்டுள்ளார். இதன் பின்புலத்தை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இந்த விஷயத்தில், பொறுப்பற்ற பதிவுகள் மீது காவல்துறை கவனத்துடன் வழக்கு பதிவு செய்து, அனைத்து சட்டபூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

banner

Related Stories

Related Stories