தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் கடந்த செப்.27 அன்று மாலையில் கரூரில் ரசிகர்களை சந்தித்தபோது, குறிப்பிட்ட நேரத்தை கடந்து அவர் சம்பவ இடத்துக்கு வருகை தந்ததால், அவரை பார்க்க ஏராளமானோர் முண்டியடித்தனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.
பலரும் ஒருவர் மேல் ஒருவர் மோதி, கீழே தள்ளி, மிதித்து சென்ற நிலையில், அந்த கூட்ட நெரிசல் அடுத்தடுத்த இடங்களுக்கும் பரவியது. தொடர்ந்து ஏராளமானோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த நிலையில், உடனடியாக அவர்கள் ஒவ்வொருவரும் மீட்கப்பட்டு ஆம்புலன்ஸ் மூலம் அங்குள்ள அரசு மருத்துவமனைக்கும், தனியார் மருத்துவமனைக்கும் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்கே அவர்கள் அனைவர்க்கும் மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், ஒரு சிலர் உயிர் பிழைத்துள்ளனர். அதே வேளையில் அதில் பலரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தே பின்னர் கொண்டு வரப்பட்டனர். இதுவரை இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைகள் உள்பட 41 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே நேற்றே தகவலறிந்து சம்பவ இடத்திற்கு முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து தேவையான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொண்டனர். தொடர்ந்து போர்க்கால நடவடிக்கை எடுக்கவும், இதுகுறித்து விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்தும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
கரூர் பெருந்துயர் விவகாரம் இந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவில் செய்தியாக வெளியாகி பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், செய்தியாளர்களை சந்திக்காமல், அவர்கள் கேள்விக்கு பதில் அளிக்காமல் சென்னைக்கு சென்ற விஜய்க்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த கோர பலிக்கு காரணமான விஜயை கைது செய்ய வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
அந்த வகையில் தமிழ்நாடு மாணவர் சங்கம் போஸ்டர் ஒட்டி தங்கள் எதிர்ப்புகளை பதிவு செய்ததோடு, விஜயை கைது செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி வருகின்றனர். இதுகுறித்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டரில், “ 39 அப்பாவி உயிர்களை பலி வாங்கி, தப்பி ஓடிய விஜய் என்கிற அரசியல் தற்குறியை கொலைக்குற்றவாளி என கைது செய்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.