தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (27.9.2025) சென்னை, தரமணி, எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெற்ற பேராசிரியர் எம். எஸ். சுவாமிநாதன் நூற்றாண்டு நினைவஞ்சலி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-
வரலாற்றில் ஒரு சிலர்தான் பல கோடி பேர் மீது தாக்கம் செலுத்தும் வாழ்வை வாழ்ந்திருக்கிறார்கள். அப்படி ஒருவராக விளங்கிக் கொண்டிருக்கக்கூடியவர் திரு. எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுடைய நூற்றாண்டு விழாவில், கலந்து கொண்டு உரையாற்றக்கூடிய வாய்ப்பை பெற்றமைக்கு நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சி அடைகிறேன், அதற்காக என் நன்றியை தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
நாட்டின் பெரும்பாலான மக்கள், பட்டினியால் காய்ந்தும் - கால் வயிறும் - அரை வயிறும் சாப்பிட்டு தவித்த காலத்தில், மக்களின் வயிறு நிறைய, மாபெரும் புரட்சி நடத்திய எம்.எஸ். சுவாமிநாதன் அவர்களுடைய பெயரை இந்தியா என்றைக்கும் நிச்சயம் மறக்காது!
தலைவர் கலைஞரோடு நெருக்கமான நட்பு கொண்டவர் நம்முடைய வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் அவர்கள். பலமுறை அவரைச் சந்திக்கக்கூடிய வாய்ப்பு எனக்கும் கிடைத்திருக்கிறது. மிக எளிமையாக பழகக்கூடியவர்!
கடைக்கோடி கிராமத்தில் இருக்கக்கூடிய ஒரு விவசாயிடம் அதே எளிமையுடன், மரியாதையுடன் பேசக்கூடியவர்! அதுவும் பாரத ரத்னா எம்.எஸ். சுவாமிநாதன் அவர்கள், 2021-ஆம் ஆண்டு M.S.S.R.F. சார்பில் நடந்த பன்னாட்டுக் கருத்தரங்கை தொடங்கி வைத்து, நான் அவரைப் பாராட்டி பேசியிருக்கிறேன். அவரும் என்னை வாழ்த்தி, பாராட்டியிருக்கிறார்; பல்வேறு ஆலோசனைகளை என்னிடத்திலும் அவர் வழங்கியிருக்கிறார். ஆனால், இன்று அவர் நம்மிடத்தில் இல்லை என்கின்ற வருத்தம் என்னைப் பொறுத்தவரையில், நிச்சயமாக இருந்து கொண்டிருக்கிறது.
“இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை” என்று உலகமே அவரை அழைத்தாலும், நமக்கு அவர், உணவுப் பாதுகாப்பின் காவலராகவும், குரலற்றோரின் குரலாகவும், எளிமையின் உருவமாகவும் அவர் இருந்தார். தான் கொண்ட அறிவை, தான் கற்ற அறிவியலை, மக்களின் பசியைப் போக்குவதற்கு பயன்படுத்திய, தொலைநோக்குச் சிந்தனையாளர் எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள்!
இன்றைக்கு உலகமே பேசக்கூடிய அளவுக்கு, காலநிலை மாற்றம் குறித்து 50 ஆண்டுகளுக்கு முன்பே அவர் பேசியிருக்கிறார். இன்றைய இளைய தலைமுறையினர் பலருக்கும், ஐம்பது, அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் நாடு இருந்த நிலைமை தெரிய வாய்ப்பில்லை!
விடுதலைக்குப் பிறகு, இந்தியாவைக் கட்டமைத்துக் கொண்டிருந்த காலம் அது! மக்களின் உணவுத் தேவை அவ்வளவு எளிதாக பூர்த்தி அடையவில்லை. பசியால் பலர் இறந்தார்கள்! அந்த நிலைமையெல்லாம், இன்றைக்கு மாறியிருக்கிறது என்றால், அதற்கு, எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்கள் முன்னெடுத்த “பசுமைப் புரட்சி”தான் முக்கிய காரணம்!
அதுமட்டுமல்ல, இந்த வளர்ச்சியுடன் வந்த விளைவுகளை பற்றியும், ஒரு அறிவியலாளராக எடுத்துச் சொல்லி அவர் கவலைப்பட்டார். கெமிக்கல் உரங்களுடன் நச்சுத்தன்மை நிலம் எப்படி பாழாகிறது என்றெல்லாம் தெளிவாக எடுத்துச் சொல்லி, வயிறு நிரம்பினால் மட்டும் போதாது, நாம் வழங்குகின்ற உணவு சத்தானதாவும், நிலையானதாவும் இருக்கவேண்டும் என்று சொன்னார்.
இங்கே பல அறிவியலாளர்களும், அவருடைய ஆராய்ச்சி அறக்கட்டளையைச் சேர்ந்தவங்களும் இருக்கிறீர்கள். அவருடைய கனவுகளை நனவாக்குகின்ற பணிகளில் நீங்கள் தொடர்ந்து ஈடுபடவேண்டும். சத்தான, அதேசமயம் பெரும் மக்கள் தொகையின் தேவையை தீர்க்கும் ஆற்றலுள்ள பயிர்களைக் கண்டறிய நீங்கள் எல்லாம் பாடுபடவேண்டும்!
வேளாண்மைக்கான நவீன கருவிகளை குறைந்த விலையில் உழவர்களிடம் கொண்டு சேர்க்கின்ற பணியையும் நாம் செய்தாக வேண்டும்! இதற்கெல்லாம் அடித்தளமாகதான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், வேளாண்மைக்கு என்று தனி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்து கொண்டு வருகிறோம். அதுவும், இந்த ஆண்டு வேளாண்மை பட்ஜெட்டில், வேளாண்மையில், புதிய கண்டுபிடிப்புகளுக்கான "டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி நிதி" உருவாக்கப்படும் என்று அறிவித்து, அதற்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்திருக்கிறோம் என்பது குறிப்பிடத்தக்கது!
எப்படி சுவாமிநாதன் அவர்கள், உழவர்களின் உரிமைக்காகவும், நன்மைக்காகவும், நலனுக்காகவும் செயல்பட்டாரோ, அப்படித்தான் நம்முடைய அரசும், உழவர்களின் உணர்வுப்பூர்வமான உறவைப் பேணி, அவர்களுக்கான பல திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டு வருகிறது.
இப்போது கூட இந்த நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அடுத்ததாக, சென்னை வர்த்தக மையத்தில் நடைபெறக்கூடிய வேளாண் வணிகத் திருவிழா - இரண்டு நாட்கள் நடைபெற இருக்கிறது - அதைத் தொடங்கி வைப்பதற்கு இங்கிருந்து நான் நேரடியாக அங்கு செல்ல இருக்கிறேன்.
மண்ணுயிர் காத்து மன்னுயிர் காக்கும் எங்களுடைய முயற்சிகளுக்கு அறிவியலாளர்களும் துணை நிற்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். நிச்சயம் நீங்கள் எல்லாம் துணை நிற்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது!
நம் எல்லோருடைய நெஞ்சங்களிலும் நிறைந்து வாழக்கூடிய எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுடைய வழியில், திருமிகு. சவுமியா சுவாமிநாதன் அவர்களும் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
“ஒன்றிய அரசு இந்திய அளவில், 2070-க்குள் கார்பன் பயன்பாட்டை குறைக்க திட்டமிட்டு இருக்கக்கூடிய இந்த நிலையில், தமிழ்நாடு 2050-ஆம் ஆண்டுக்குள்ளே அதை நிறைவேற்ற முயற்சி செய்கிறது” என்று நம்முடைய நல்ல முன்னெடுப்புகளுக்கு ஆதரவாக பேசி துணையாக இருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்த நேரத்தில் என்னுடைய வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்கிறேன்!
இந்தியாவின் எதிர்காலத்தை வடிவமைத்த ஆளுமைகளில் ஒருவரான எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களை பெருமைப்படுத்தும் வகையில், நம்முடைய திராவிட மாடல் அரசில், போரூர் ஈரநிலப் பசுமைப் பூங்காவுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களுடைய பேரைச் சூட்டி திறந்து வைத்திருக்கிறோம்.
மேலும், தஞ்சாவூர் மாவட்டம் ஈச்சங்கோட்டையில் இருக்கின்ற வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், ‘டாக்டர். எம்.எஸ். சுவாமிநாதன் வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம்’ என்று அழைக்கப்படும் என்று அறிவித்திருக்கிறோம்.
அதேபோல, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கு டாக்டர் எம்.எஸ். சுவாமிநாதன் பெயரில், ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என்று சொல்லியிருக்கிறோம்.
கடந்த ஆகஸ்ட் மாதம், டெல்லியில் நடைபெற்ற 'பாரத ரத்னா' திரு.எம். எஸ். சுவாமிநாதன் அவர்களின் நூற்றாண்டு நினைவு பன்னாட்டு மாநாட்டில், மாண்புமிகு அமைச்சர் திரு. தங்கம் தென்னரசு அவர்கள் தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு, சுவாமிநாதன் அவர்கள் குறித்த புத்தகத்தையும் வெளியிட்டார்.
உழவர்களின் நலனை பாதுகாத்து, சிறப்பான எதிர்காலத்தையும் உருவாக்குகின்ற நம்முடைய பணிகளுக்கு எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களின் வாழ்வும், தொண்டும் நமக்கு என்றென்றும் வழிகாட்டும்!
வாழ்க எம்.எஸ்.சுவாமிநாதன் அவர்களது புகழ் என்று கூறி, வேளாண்மையையும், உழவர்களையும் எந்நாளும் பாதுகாப்போம் என்று உறுதி கூறி, விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.