நடிகர் விஜய் 2016-17ஆம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்து இருந்தார். அந்த ஆண்டிற்கான வருமானமாக 35 கோடியே 42 லட்சத்து 91 ஆயிரத்து 890 ரூபாய் பெற்றதாக அதில் குறிப்பிட்டிருந்தார்.
இதையடுத்து அந்த ஆண்டுக்கான மதிப்பீட்டு நடவடிக்கையை மேற்கொண்ட வருமான வரித் துறை, நடிகர் விஜய் வீட்டில் 2015 ஆம் ஆண்டு சோதனை நடத்தியது. அப்போது சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களுடன் அவர் தாக்கல் செய்த வருமான வரி கணக்குடன் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது.
அப்போது, புலி படத்திற்கு பெற்ற 15 கோடி வருமானத்தை கணக்கில் காட்டவில்லை என்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து வருமானத்தை மறைத்ததற்கான 1.50 கோடி ரூபாய் அபராதம் விதித்து கடந்த ஜூன் 30 ஆம் தேதி வருமான வரித்துறை உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவுக்கு ஏற்கனவே நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று நடிகர் விஜய் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு நீதிபதி சி.சரவணன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, வருமான வரித்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், வருமான வரிச்சட்டப்படி நடிகர் விஜய்-க்கு அபராதம் விதித்து சரிதான். அதனால் அவர் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
இதையடுத்து, இதேபோன்ற ஒரு வழக்கில், பிறப்பிக்கப்பட்ட உத்தரவின் நகலை தாக்கல் செய்ய விஜய் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அக்டோபர் 10ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.