கிருஷ்ணகிரி ஜக்கப்பன்நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்தவர் கலைச்செல்வி. இவர் தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், தனது பேர குழந்தைகளை வழக்கம் போல் பள்ளி வாகனத்தில் ஏற்றிவிட்டு வீட்டிற்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
அப்போது அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர் ஒருவர் கலைச்செல்வியின் கழுத்தில் இருந்து செயினை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
உடனே இது குறித்து கலைச்செல்வி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை அடித்து போலிஸார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் சிசிடிவி காட்சிகளை கொண்டு உடனே விசாரணை தொடங்கினர். பிறகு ஆந்திர மாநிலம் குப்பம் செல்லும் சாலையில் உள்ள குருவிநாயனப்பள்ளி என்ற பகுதியில் அந்த நபரை மடக்கி பிடித்தனர்.
இதையடுத்து நடத்தி விசாரணையில், நகை பறிப்பில் ஈடுபட்டது ஆந்திர மாநிலம் அனந்த்பூர் பகுதியை சேர்ந்த ஜெகதீஸ்வர சுதர்சன குமார் என்பது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஒரு சவரன் தங்க நகையை மீட்டு , விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகார் அளித்த 45 நிமிடத்திலேயே குற்றவாளியை பிடித்து கைது செய்த போலிஸாருக்கு கிருஷ்ணகிரி மக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.