தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னை சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ராயப்பேட்டை பேகம் சாகிப் மெயின் தெருவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" திட்ட முகாமினை நேரில் பார்வையிட்டு மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார்.
பொதுமக்கள் அன்றாடம் அணுகும் அரசுத் துறைகளின் சேவைகள், திட்டங்களின் கீழ் பொதுமக்களின் குறைகளை வீட்டிற்கே வந்து கேட்டறிந்து தீர்வு காணும் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் ஜூலை 15 முதல் நவம்பர் 2025 வரை அனைத்து மாவட்டங்களிலும் மொத்தம் 10,000 முகாம்கள் நடைபெறவுள்ளன.
இத்திட்டத்தின் கீழ் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சார்ந்த 43 சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க, மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கான விண்ணப்பம் "உங்களுடன் ஸ்டாலின்" முகாம்களில் மட்டுமே வழங்கப்படுகின்றன. மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாளன்று முகாமிற்குச் சென்று, விண்ணப்பத்தினை பெற்று, பூர்த்தி செய்து தங்கள் விண்ணப்பத்தினை அளிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பெருநகர சென்னை மாநகராட்சியில் "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் முகாம்கள் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெறுகின்றன.
இன்று (26.8.2025) சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வார்டு–119, ராயப்பேட்டை மீர்சாகிப்பேட்டை மார்க்கெட் அருகில், பேகம் சாகிப் மெயின் தெருவில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி சமூக நலக்கூடத்தில் நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின்" முகாமில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, எரிசக்தித்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை உள்ளிட்ட 13 அரசுத்துறைகள் மூலம் மக்களிடமிருந்து மனுக்கள் பெற்று உரிய பதிவுகளை மேற்கொண்டு அதற்கான ஒப்பமும் வழங்கப்பட்டது. முகாமிற்கு வருகை தந்த பொதுமக்களின் உடல் நலனைப் பேணும் வகையில், சிறப்பு மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.
மேலும் தூய்மை பணியாளர்களுக்கு அரசின் மூலம் வழங்கப்படும் நலத்திட்ட உதவிகளின் விவரங்கள், நலத்திட்ட உதவிகளை பெறத்தேவைப்படும் ஆவணங்கள் குறித்த தகவல் தொகுப்பு கையேடு முகாமிற்கு வருகை தந்த தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது.
இந்த முகாமினை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மனுக்களை அளிக்க வந்த பொதுமக்களுடன் கலந்துரையாடி, தீர்வுகளை வழங்கினார். மேலும் இந்த முகாமில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் பொதுமக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மருத்துகள் வழங்கப்படுவதையும் பார்வையிட்டார்.