தி.மு.க சார்பில் ஆண்டுதோறும் நடைபெறும் முப்பெரும் விழா, 2025ஆம் ஆண்டில் கரூர் மாவட்டத்தில் வருகிற செப்டம்பர் 17ஆம் நாள் நடைபெற இருக்கிறது என தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
தி.மு.க தொடங்கப்பட்ட நாள் (செப்.17), தி.மு.க நிறுவனர் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் (செப். 15) மற்றும் திராவிட கருத்தியல் முன்னோடி தந்தை பெரியார் பிறந்தாள் (செப்.17) என மூன்றையும் கொண்டாடும் வகையில், ஆண்டுதோறும் முப்பெரும் விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
இவ்விழா, வெறும் கொண்டாட்டமாக இல்லாமல் கருத்தியல் கொண்டாட்டமாக அமைந்து வருகிறது. அவ்வகையில் கடந்த ஆண்டு (2024), தி.மு.க நிறுவப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் முப்பெரும் விழாவுடன் இணைந்து தி.மு.க.வின் பவள விழாவும் நடத்தப்பட்டது.
சென்னையில் நடைபெற்ற இவ்விழாவில், இலட்சக்கணக்கான கழகத்தினர் பங்கேற்று கழக பவள விழாவிற்கு மேலும் மெருகூட்டினர். இதனடையடுத்து, பவள விழா கண்ட பேரியக்கம் என்ற சிறப்புடன், 2025ஆம் ஆண்டிற்கான முப்பெரும் விழா வருகிற செப். 17 நாள் கரூரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும் விருதுகளுக்கு, நடப்பாண்டில் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரங்களையும் தி.மு.க தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, தி.மு.கழக துணைப் பொதுச்செயலாளரும், கழக நாடாளுமன்றக் குழுத் தலைவருமான கனிமொழிக்கு ‘பெரியார் விருது’ அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
அண்ணா விருது
தணிக்கைக்குழு முன்னாள் உறுப்பினரும் - பாளையங்கோட்டை நகர்மன்ற முன்னாள் தலைவருமான சுப. சீத்தாராமன்.
கலைஞர் விருது
நூற்றாண்டு கண்டவரும், அண்ணாநகர் பகுதி முன்னாள் செயலாளரும், அண்ணாநகர் சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் உறுப்பினருமான சோ.மா. இராமச்சந்திரன்.
பாவேந்தர் விருது
கழக மூத்த முன்னோடியும், தலைமைச் செயற்குழு உறுப்பினரும், குளித்தலை ஒன்றியக்குழு முன்னாள் தலைவருமான குளித்தலை சிவராமன்.
பேராசிரியர் விருது
கழக ஆதிதிராவிடர் நலக்குழுத் தலைவரும், காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதி முன்னாள் உறுப்பினரும், சட்டப்பேரவை முன்னாள் கொரடாவுமான மருதூர் இராமலிங்கம்.
மு.க.ஸ்டாலின் விருது
ஒருங்கிணைந்த கோவை மாவட்ட முன்னாள் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பொங்கலூர் நா.பழனிச்சாமி அவர்களுக்கும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.