தமிழ்நாடு

பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை பெற்ற ஏராளமான திட்டங்களை பட்டியலிட்டடுள்ளது தமிழ்நாடு அரசு.

பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சியில் பள்ளிக் கல்வித்துறை பெற்ற ஏராளமான திட்டங்களை பட்டியலிட்டடுள்ளது தமிழ்நாடு அரசு. அதில் குறிப்பிட்டுள்ளவை பின்வருமாறு,

​முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 இல் முதலமைச்சராகப் பொறுப்பேற்றது முதல் தமிழ்நாட்டுக் குழந்தைகள் ஒவ்வொருவரும் தரமான உயர்ந்த கல்வி பெறவேண்டும் எனப் பல்வேறு புதிய திட்டங்களை உருவாக்கி வருகிறார்கள்.​

கல்வி வளர்ச்சியில் பள்ளிக்கல்வி மிகமிக முக்கியமானது. அது ஒரு மாளிகைக்கு அடித்தளம் போன்றது; அடித்தளம் வலுவாக இருந்தால்தான் அதன் மீது எழும்பும் கட்டடம் மிகவும் வலுவாக அமையும். அதுபோலத்தான் பள்ளிக்கல்வி சரியாக அமைந்துவிட்டால் தொடர்ந்து படிக்கும் ஆர்வத்தை அதுவே மாணவர்களிடம் ஏற்படுத்திவிடும்.

இந்த அடிப்படையில்தான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எல்லோருக்கும் தரமான பள்ளிக்கல்வியை வழங்கிடும் நோக்கில் புதிய புதிய திட்டங்களை உருவாக்கியுள்ளார்கள்.

திராவிட நாயகர் வெளியிட்டுள்ள தமிழ்நாடு அரசின் புதிய கல்விக்கொள்கை 2025

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் திராவிட மாடல் ஆட்சி கல்வியில் சமூக சமத்துவத்திற்காக, ஆழமாக வேரூன்றிய தமிழ்நாட்டின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், எதிர்காலத்தை நோக்கிய ஒரு துணிச்சலான முன்னெடுப்பாகவும் தமிழ்நாடு மாநிலக் கொள்கையைப் புதிதாக வடிவமைத்துள்ளது.

விரிவான ஆலோசனைகள் மற்றும் உள்ளார்ந்த பகுப்பாய்வு மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள இக்கொள்கை தமிழ்நாட்டின் தனித்துவமான பண்பாடு, மொழி மற்றும் சமூக மரபு ஆகியவற்றை உள்ளடக்கி முற்போக்குடைய ஒரு விரிவான குழந்தை மையப் பார்வையைக் கொண்டதாக அமைந்துள்ளது.

இந்தக் கொள்கையின் ஒவ்வொரு இயலும் மறுகட்டமைப்பும் புதுப்பித்தலுக்கான வழிமுறையையும் கவனமுடன் முன்வைக்கிறது. மேலும், இது ஓர் எழுச்சிமிக்க, சமத்துவமான மற்றும் குழந்தைகளை எதிர்காலத்திற்குத் தயார்ப்படுத்தும் சிறந்த கல்வி முறைக்கான ஒரு திட்ட வரைவை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டில் ஒரு புதிய வரலாறு படைக்கவிருக்கும் தமிழ்நாடு அரசின் புதிய இந்த மாநிலக் கல்விக் கொள்கை 2025 முதலமைச்சர் அவர்களால் 8.8.2025 அன்று வெளியிடப்பட்டு கல்வியாளர்களால் வரவேற்கப்படுகிறது.

ரூ.660.35 கோடியில் இல்லம் தேடிக் கல்வி

​முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கொரோனா காலக் கற்றல் இடைவெளியை நிறைவு செய்திடும் நோக்கில் இந்தியாவில் எந்த மாநிலமும் செயல்படுத்தாத வகையில் அறிமுகப்படுத்திய திட்டம் இல்லம் தேடிக் கல்வித் திட்டம்.

இத்திட்டத்திற்கு 2021-22 முதல் ரூ. 660.35 கோடி ஒதுக்கீடு 1.65 இலட்சம் தன்னார்வலர்கள் மூலம் 34 இலட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர். 2025–2026 ஆம் கல்வியாண்டில் ரூ.44.14 கோடி ஒதுக்கீட்டில் செயல்பட்டு வரும் 34,000 இல்லம் தேடிக் கல்வி மையங்களில் 5.986 இலட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர்.

பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!

எண்ணும் எழுத்தும் திட்டம்

20 தொடக்கப்பள்ளிகளில் 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளிடையே அடிப்படைக் கல்வியறிவு மற்றும் எண்ணறிவை மேம்படுத்தவும், ஒவ்வொரு குழந்தையும் 2025 ஆம் ஆண்டுக்குள் வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை எண்கணிதத் திறன்கள் அடைவதை உறுதி செய்யவும் “எண்ணும் எழுத்தும்” திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

1 முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் குழந்தைகளுக்கு நிலை வாரியான (அரும்பு, மொட்டு, மலர்) பயிற்சி நூல்கள், ஆசிரியர்களுக்கு விரைவுத் துலங்கல் குறியீட்டுடன் கூடிய ஆசிரியர் கையேடுகள் போன்றவை அளிக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் மூலம் 37,767 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 25.08 இலட்சம் மாணவர்கள் பயனடைகின்றனர்.

44.50 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வாசிப்பு இயக்கம்

​தமிழில் சரளமாக வாசிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளிடையே உறுதி எய்யும் குறிக்கோளுடன் வாசிப்பு இயக்கம், முன்னோடித் திட்டமாக 11 மாவட்டங்களில் 11 ஒன்றியங்களில் தொடங்கப்பட்டு, 914 அரசுப் பள்ளிகளில் 4 ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் 66,618 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

குழந்தைகளைக் கவரக்கூடிய எளிய மொழியில் புத்தகங்கள் நுழை, நட, ஓடு, பற எனும் நான்கு தனித்தனி வாசிப்பு நிலைகளாக வகைப்படுத்தப்பட்டு, 123 புத்தகங்கள், 1 வாசிப்பு இயக்கக் கையேடு ஆகியவை அச்சிடப்பட்டு அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை பயிலும் 44.50 இலட்சம் மாணாக்கர்கள் பயன் பெற்று வருகின்றனர்.

அனைத்துப் பள்ளிகளிலும் இணைய சேவை

​அரசுப் பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களைச் சிறப்புப் பயிற்றுநர்கள் மூலம் அடையாளம் காணவும், அதன் அடிப்படையில் தக்க சிறப்புக் கல்வி வழங்கவும் நலம் நாடி செயலி வடிவமைக்கப்பட்டுப் பயன்படுத்தப்படுகிறது. 2024-25 ஆம் கல்வியாண்டில் பள்ளியிலேயே ஆதார் திட்டத்தின் மூலமாக அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் 76,56,074 மாணவர்களுக்கு ஆதார் புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீதமுள்ள 36,91,318 மாணவர்களுக்கு ஆதார் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. 28,067 அரசுத் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 100 Mbps வேகமான இணைய வசதி வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6,540 அரசுப் பள்ளிகளில் இணைய சேவை ஏற்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

ரூ.352 . 42 கோடியில் 44 மாதிரி பள்ளிகள்

​ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு பள்ளி வீதம் மொத்தம் 38 மாதிரிப் பள்ளிகள் ரூ.352.42 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த மாதிரிப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களில் பலர் பல்வேறு முதன்மைக் உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்று உயர்கல்வியைத் தொடர்ந்து வருகின்றனர்.

ரூ.100 . 82 கோடியில் 28 தகைசால் பள்ளிகள்

​மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே கற்றல் எல்லைகளை விரிவுபடுத்த இப்பள்ளிகள் தளமாக விளங்குகின்றன. 28 மாவட்டங்களில் மாவட்டத்திற்கு ஒரு பள்ளி வீதம், 28 பள்ளிகள் தகைசால் பள்ளிகளாக ரூ.100.82 கோடி செலவில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள்

​அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ரூ.519.73 கோடி மதிப்பீட்டில் 8,209 உயர் தொழில்நுட்ப ஆய்வகங்கள் (Hi-Tech Lab) அமைக்கும் பணிகள் நிறைவடையும் நிலையில் உள்ளன.

ரூ.455 . 32 கோடியில் திறன்மிகு வகுப்பறைகள்

​முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தரமான வகுப்பறைச் சூழுல்கள் படிப்பார்வத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்தும் என்பதால் திறன்மிகு வகுப்பறைகள் அமைத்திட உத்தரவிட்டார்கள். அதன்படி, அரசுப் பள்ளிகளில் பயிலும் 16,77,043 மாணவர்கள் பயனடையும் வகையில் ரூ.455.32 கோடி செலவில் 22,931 திறன்மிகு வகுப்பறைகள் (Smart Classroom) அமைக்கப்பட்டு மாணவ, மாணவியர்களின் ஆற்றல்கள் வளர்க்கப்படுகின்றன.

தொழிற்கல்வி பாடத்திட்டம் மறுசீரமைப்பு

2021-22 ஆம் கல்வியாண்டு முதல் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்புக்கான சீரமைக்கப்பட்ட தொழிற்கல்விப் பாடத்திட்டம் மற்றும் பாடப் புத்தகங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு 60,000 க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. மேலும் தொழிற்கல்வி மாணவர்களுக்கான துறை சார் அகப்பயிற்சி (Internship) ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு அகப்பயிற்சியை நிறைவுசெய்த மாணவர்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.

2022-23 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் மூலம் தொழிற்கல்வி கற்பிக்கும் 726 தொழிற்கல்வி ஆசிரியர்களுக்கு மறுசீரமைக்கப்பட்ட பாடத்திட்டங்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்கப்பட்டுச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளன.

​2024–25 ஆம் கல்வியாண்டு மறுசீரமைக்கப்பட்ட தொழிற்கல்வி பாடத்திட்டம், மாணவர்களுக்கு அகப்பயிற்சி ஆகிய அம்சங்களை உள்ளடக்கி செயல்படுத்தப்பட்டு வந்த நிலையில், 2025–26 ஆம் கல்வியாண்டில் தொழிற்கல்வி மேம்பாட்டிற்காக மாநில அளவிலான திறன் கல்வி குழு – திறன்சார் அரசு துறைகள், தொழில் நிறுவனர்கள் ஆகியோரை கொண்டு அரசாணை 75 மூலம் அமைத்து தொழிற்கல்வி பாடப்பிரிவுகளை மாணவர்களின் வேலை வாய்ப்பினை மேம்படுத்த ஏதுவாக மறுசீரமைப்பதற்கான பணிகள் இக்குழுவின் வாயிலாக, பாடத்திட்டத்திற்கென அமைக்கப்பட்ட கிளை குழு வாயிலாக பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் தொழிற்கல்வி மாணவர்களை அருகில் உள்ளதொழிற்பயிற்சி நிறுவனங்களின் வாயிலாக திறன் பயிற்சிகளும் வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!

ஆசிரியர்களுக்குக் கைக்கணினிகள்

​முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சிறப்புத்திட்டமாக 79,723 இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.81 கோடி செலவில் கைக்கணினிகள் (Tablet) வழங்கப்பட்டுள்ளன.

பொது மாறுதல் கலந்தாய்வு

​அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டு இணைய வழியில் EMIS மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.

ரூ.3,117 கோடியில் பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டுத் திட்டம்

இத்திட்டத்தின்கீழ் 2022-23 மற்றும் 2023-24ஆம் கல்வியாண்டுகளில் 614 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு ரூ.1087.76 கோடியும், 2,455 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு ரூ.800 கோடியும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, 2,455 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளிலும், 391 உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளிலும் வகுப்பறைக் கட்டங்கள், ஆய்வகங்கள் மற்றும் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.

மேலும் 2024–25 ஆம் கல்வியாண்டில் 440 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.745.27 கோடியும், பராமரிப்பு பணிகளுக்கென ரூ.200 கோடியும் மற்றும் 526 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.284 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு, பணிகள் நடைபெற்று வருகின்றன.

மேலும், தற்போது 2025-26 ஆம் கல்வியாண்டில் 567 அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.734.55 கோடியும். பராமரிப்பு பணிகளுக்கென ரூ.200 கோடியும் மற்றும் 182 ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்த ரூ.110.71 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ரூ. 11.69 கோடியில் அறிவியல் ஆய்வகத் திட்டம் ​

​முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுரையின்படி, அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடையே அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) ஆகியவற்றில் ஆர்வத்தையும் திறனையும் தூண்டும் வகையில் நடமாடும் அறிவியல் ஆய்வகத் திட்டம் (வானவில் மன்றம்) ரூ.11.69 கோடி செலவில் 33.50 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது - பேராசிரியர் அன்பழகன் விருது

2023-2024 ஆம் ஆண்டு முதல் கற்றல் கற்பித்தல், ஆசிரியர் திறன்மேம்பாடு, தலைமைத்துவம், மாணவர் வளர்ச்சி என பன்முக வளர்ச்சியினை வெளிப்படுத்தும் சிறந்த பள்ளிகளுக்குப் பேராசிரியர் அன்பழகன் அவர்கள் பெயரில் விருது, கல்வி வளர்ச்சிக்காக அறிமுகப்படுத்தப்படும் அரசின் திட்டங்கள் அனைத்தையும் சிறப்பாகச் செயல்படுத்தும் 100 தலைமை ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது, ஆகியவற்றுடன் அரசுப் பள்ளி ஆசிரியர்களின் குழந்தைகளுக்கு உயர்கல்விச் செலவினத்திற்கான உதவித் தொகை ரூ.50,000 ஆக உயர்த்தப்பட்டு வழங்கப்படுகிறது.

கணினி அறிவியல் பாடத் தனிக் கட்டணம் ரத்து

​2022-23 ஆம் கல்வியாண்டு முதல் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளில் கணினி அறிவியல் பாடத்தை விருப்பப் பாடமாகப் பயிலும் மாணவர்களிடம் வசூலிக்கப்படும் தனிக் கட்டணம் ரூ.200 இரத்து செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 3.5 இலட்சம் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

மகிழ் முற்றம்

​அனைத்துப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களிடையே தலைமைப் பண்பை வளர்க்கும் வகையில், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் பெயர்களில் மாணவர் குழுக்கள் அமைக்கப்பட்டு , மகிழ் முற்றம் எனும் திட்டம் 2024–25 ஆம் கல்வியாண்டு முதல் 37,470 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படுகிறது.

ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டம்

​முதலமைச்சர் அவர்கள் ​ நாட்டின் எதிர்காலமான நம் இளைஞர் சமுதாயத்தை உருவாக்கும் ஆசிரியர்களின் நலன்களைக் காத்தல் நம் கடன் என்ற அடிப்படையில் ஆசிரியர்களுக்கு முழு உடல் பரிசோதனை திட்டத்தை அறிமுகப்படுத்தினார்கள்.

அத்திட்டத்தின்படி, ஆசிரியர்களுக்கு மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. இத்திட்டத்திற்கென, தலா ரூ.1,50,000 ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒதுக்கீடு செய்து 38 மாவட்டத்திற்கும் ரூபாய் 57 இலட்சம் ஆசிரியர் நல நிதியிலிருந்து அனுமதிக்கப்பட்டு திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!

மாணவர்கள் ஆசிரியர்களை ஊக்கப்படுத்தும் வெளிநாட்டுக் கல்விச் சுற்றுலா திட்டம்

​பள்ளி அளவில் கல்வி மற்றும் இணைச் செயல்பாடுகளான மன்றச் செயல்பாடுகள், நூல் வாசிப்பு, நுண் கலைகள், விளையாட்டு மற்றும் அறிவியல் ஆகியவற்றில் சிறந்து விளங்கும் மாணவர்கள் உலக அளவிலும், தேசிய / மாநில அளவில் புகழ்பெற்ற இடங்களுக்கும் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்ல ஆண்டு தோறும் ரூ.3 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இத்திட்டத்தின் கீழ், மாணவர்கள் மலேசியா, ஜப்பான், தென்கொரியா மற்றும் சிங்கப்பூர், ஹாங்காங், ஆகிய நாடுகளுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

​2024–25 ஆம் கல்வியாண்டில் கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 52 ஆசிரியர்கள் 23.10.2024 முதல் 28.10.2024 வரை பிரான்சு நாட்டிற்கு சர்வதேச கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். கனவு ஆசிரியர் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 325 ஆசிரியர்கள் டேராடூனுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்லப்பட்டனர்.

ரூ.658.17 கோடி நிதியுடன் நம்ம ஸ்கூல், நம்ம ஊரு பள்ளி - திட்டத்தின் முன்னேற்றம்

​தமிழ்நாடு முழுவதிலும் உள்ள அரசுப்பள்ளிகளைப் பொதுமக்கள் பங்களிப்புடன் மேம்படுத்தும் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு திட்டத்தின் கீழ் பள்ளிக்கு என்று தனித்துவமாக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரை இத்திட்டம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 400 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களுடன் இணைந்து, 658.67 கோடி ரூபாய்க்கு மேல் திரட்டி, அரசுப் பள்ளிகளில் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது.

மணற்கேணி திட்டம்

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக ‘மணற்கேணி’ என்ற டிஜிட்டல் கல்வித் தளம் உருவாக்கப்பட்டு, 2023 ஜூலை 25 அன்று மாண்புமிகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்டது. தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உயர்தரமான டிஜிட்டல் உள்ளடக்கங்களை வழங்குவதன் வாயிலாக, இந்தச் செயலி மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் உதவுகிறது.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்

​மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப் பகுதிகள் உட்பட அனைத்து அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் மாணவ / மாணவியருக்கு காலை உணவு வழங்கும் ஒரு முன்னோடித் திட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

2024–25 ஆம் கல்வியாண்டில் ஊரகப் பகுதிகளில் உள்ள அரசு உதவிபெறும் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு மொத்தம் 34,987 பள்ளிகளில் 17.53 இலட்சம் குழந்தைகள் தினமும் காலையில் சூடான, சுவையான உணவு உட்கொண்டு மகிழ்ச்சியுடன் கல்வியில் கவனம் செலுத்துகின்றனர்.

​தமிழ்வழிக் கல்வியை ஊக்குவிக்கும் வண்ணம் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் கல்வி உபகரணங்கள், பாடநூல், நோட்டு புத்தகம் போன்ற நலத்திட்ட உதவிகள், அரசு நிதியுதவின்றிச் செயல்படும் தனியார் சுயநிதி பள்ளிகளில் 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை தமிழ் வழியில் பாடங்களைப் பயிலும் மாணவர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் 49,498 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

தனியார் பள்ளிகளுக்கான அனுமதி

​மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகார ஆணைகள் இணைய வழியாக வழங்கும் பணிகளை 31.12.2022 அன்று தனியார் பள்ளிகளுக்கான ஒழுங்குமுறைப்படுத்துதல் இணைய முகப்பு (Regulatory Compliance Portal) மற்றும் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வுச் செயலி (Inspection App) ஆகியவற்றைத் தொடங்கி வைத்தார்கள்.

தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு

​பள்ளி மாணவர்களின் தமிழ் மொழி இலக்கியத் திறனை மேம்படுத்தும் வகையில், 2022-23 கல்வியாண்டு முதல் 11-ஆம் வகுப்பு பயிலும் மாணாக்கர்களுக்கு தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்பட்டு 1,500 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு மாதம் ரூ.1,500 வீதம் இரண்டு ஆண்டுகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.

சான்றிதழ்கள் இணையவழியில் பெறும் வசதி

​டிசம்பர் 2023 முதல் மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களின் இரண்டாம்படி, மதிப்பெண் சான்றிதழ்களின் சான்றிட்ட நகல், புலப்பெயர்ச்சி சான்றிதழ்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கான தமிழ் வழியில் பயின்றமைக்கான சான்றிதழ்கள் இணையவழியில் பெறும் வசதி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மதிப்பீட்டுப் புலம்

​பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக ரூ.40 இலட்சம் செலவில் மாநில மதிப்பீட்டுப் புலம் உருவாக்கப்பட்டுள்ளது. சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்ப நிறுவனமும் (IIT-Madras) மற்றும் சீடாக் (CDAC) நிறுவனமும் இணைந்து உருவாக்கிய மென்பொருளைப் பயன்படுத்தி அனைத்து அரசுப் பள்ளிகளிலும் அந்தந்த பள்ளிகளின் ஆசிரியர்களே வினாத்தாள்களைத் தயாரித்து மாணவர்களுக்குத் தேர்வு நடத்தி வருகின்றனர்.

2022-23 ஆம் கல்வியாண்டில் இருந்து மாநில மதிப்பீட்டுப் புலம் உயர்தொழில் நுட்ப ஆய்வகங்கள் அமைந்துள்ள அனைத்து 6029 அரசுப் பள்ளிகளிலும் 25 இலட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் இணைய வழி வினாடி வினா நிகழ்வுகளை நடத்தி வருகிறது.

பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!

திறன் மேம்பாட்டுப் பயிற்சி

​பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் 12,000 அலுவலர்களுக்கு நாட்டின் தலைசிறந்த கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்கள் உதவியுடன் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களுக்குக் கற்பித்தல் திறன் மற்றும் மாணவர்களின் கற்றல் திறன் ஆகியவற்றை மேம்படுத்திடும் பொருட்டு, 1 முதல் 10 ஆம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் என 1,53,000 பேருக்கு குறுவளமையப் பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.

கல்வித் தொலைக்காட்சி மூலம் 1 முதல் 12ஆம் வகுப்பு வரை அனைத்துப் பாடங்களையும் காணொலிகளாக உருவாக்கி ஒளிபரப்பு செய்துவருகிறது.

மெய்நிகர் ஒளிப்பதிவுக்கூடம்

நவீன தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி காணொலிகள் தயாரிப்பதற்காக, மெய்நிகர் ஒளிப்பதிவுக்கூடம் உள்ளிட்ட 5 உயர்தொழில்நுட்பப் படப்பதிவுக்கூடங்கள் மற்றும் ஒரு ஒலிப்பதிவுக்கூடம் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் உருவாக்கப்பட்டுள்ளது.

இக்காணொலிகள் மூலம் 58,721 பள்ளிகளில் உள்ள 1,23,73,598 மாணவர்கள் மற்றும் 5,32,909 ஆசிரியர்கள் பயன்பெறுகின்றனர்.

பள்ளி மேலாண்மைக்குழு மூலம் 14,019 ஆசிரியர் நியமனம்

​மாணவர்களின் நலனுக்காக 2023-24 ஆம் கல்வியாண்டில், 4 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 6 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டன. 4,989 இடைநிலை ஆசிரியர்கள், 5,154 பட்டதாரி ஆசிரியர்கள் 3,876 முதுகலை ஆசிரியர்கள் பணியிடங்கள் என மொத்தம் 14,019 ஆசிரியர் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் பள்ளி மேலாண்மைக் குழுக்களின் மூலம் நியமனம் செய்ய ஆணை வெளியடப்பட்டன.

3,043 முதுகலை ஆசிரியர்கள் நியமனம்

​2021–2022 ஆம் ஆண்டில்முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய பணியிடங்களுக்கான கணினி வழியாக போட்டித்தேர்வு நடத்தப்பட்டு, 3,043 முதுகலை ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு பணிநியமனம் வழங்கப்பட்டுள்ளது.

2021–22 ஆம் ஆண்டில் 97 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கு இணைய வழியாகத் தேர்வுகள் நடத்தப்பட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன. 2023–24 ஆம் ஆண்டில் 33 வட்டாரக் கல்வி அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டன.

ஆசிரியர் தகுதித் தேர்வு

​ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1-க்கான தேர்வுகள் இணையவழியில் 14.10.2022 முதல் 19.10.2022 வரை நடத்தப்பட்டு, 21543 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்கான கணினி வழித் தேர்வுகள் 3.2.2023 முதல் 15.2.2023 வரை நடத்தப்பட்டு, அதில் 16090 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

ஆசிரியர் தகுதித் தேர்வு சான்றிதழ்களின் மறுபிரதி சான்றிதழ்கள் 17.7.2023 முதல் இணைய வழியில் இ-சேவை மையம் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. ஜனவரி 2025 வரை 9113 சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.

​3192 பட்டதாரி ஆசிரியர் / வட்டார வள மைய பயிற்றுநர் பணியிடங்களுக்கு பணிநாடுநர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வு 4.2.2024 அன்று நடத்தப்பட்டு, தகுதியான பணிநாடுநர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். 2,768 இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்களுக்குப் பணிநாடுநர்களைத் தெரிவு செய்வதற்கான தேர்வு 21.7.2024 அன்று நடத்தப்பட்டுள்ளது.

​ஆசிரியர் தேர்வு வாரியம் தொடர்பான மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள குறைதீர்க்கும் மையம்

(Grievance Redressal Cell) உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தொலைபேசி தகவல் மையம் (Call Centre) செயல்பட்டு வருகிறது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 2021 இல் ஆட்சிப் பொறுப்பேற்றபின் இல்லம் தேடிக் கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், திறன்மிகு வகுப்பறைகள், காலை உணவுத் திட்டம், புதிய ஆசிரியர் நியமனங்கள், கல்விச் சுற்றுலா திட்டம் முதலிய பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியதால் சிறந்த தரமான பள்ளிக்கல்வியை வழங்குவதில் தமிழ்நாடு இந்திய அளவில் சிறந்து விளங்குகிறது.

banner

Related Stories

Related Stories