சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.
அண்மையில், சென்னை மெட்ரோ இரயில் சேவை தொடங்கப்பட்டு பத்து ஆண்டுகள் நிறைவு பெற்ற நிலையில், 2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் 1,03,78,835 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளதாகவும், ஜூன் மாதத்தை விட ஜூலை மாதத்தில் 11,58,910 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சென்னை கோயம்பேடு - பட்டாபிராம் இடையேயான மெட்ரோ ரயில் போக்குவரத்துக்காக, விரிவான திட்ட அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் அண்மையில் சமர்ப்பித்தது.
கோயம்பேட்டில் தொடங்கி, பாடி புதுநகர், முகப்பேர், அம்பத்தூர், திருமுல்லைவாயல், ஆவடி வழியாக பட்டாபிராம் வெளிவட்டச் சாலையை இணைக்கும் வகையில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், கோயம்பேடு முதல் பட்டாபிராம் வரை 21.76 கிலோ மீட்டர் மெட்ரோ ரயில் பணிகள் மேற்கொள்ள அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதற்காக 2 ஆயிரத்து 442 கோடி ரூபாய்க்கு நிர்வாக அனுமதி வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.