வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தொகுதியில் நேற்று (ஆக.18) எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அப்போது அந்த வழியாக 108 ஆம்புலன்ஸ் ஒன்று வந்துள்ளது. அதனை பார்த்து கோபமடைந்த எடப்பாடி பழனிசாமி, "அடுத்த கூட்டத்தில் ஆம்புலன்ஸ் வந்தால் அந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் அதில் நோயாளியாக மருத்துவமனைக்கு செல்வார்" என மிரட்டினார்.
இவரின் இந்த மிரட்டல் பேச்சு அங்கிருந்த பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு எதிர்க்கட்சி தலைவர் இப்படி பேசலாமா? என்ற கேள்வியை இங்கிருந்தவர்கள் மனதில் நிச்சயம் எழுந்து இருக்கும். இந்த சம்பவம் குறித்த வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி பலர் மத்தியிலும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.
இந்நிலையில், எடப்பாடி பழனிசாமியின் மிரட்டல் பேச்சுக்கு தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. இந்த சங்கத்தின் தலைவர் பிவின் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், ”நேற்று இரவு வேலூர் மாவட்டம் அணைக்கட்டு மருத்தவமனையில்
இருந்து நோயாளியை அழைத்து வருவதற்காக சென்ற 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனரை வழிமறித்து அவமதித்து, அவரை மிரட்டும் வகையில் பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு எங்கள் சங்கத்தின சார்பில் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்கிறோம்.
நேரம் காலம் பார்க்காமல் அவசரத்திற்கு அழைத்த உடனே ஓடிச்சென்று உயிர்களை காப்பது தான் எங்களின் பணி அப்படி நாங்கள் செய்யும் பணியை மதித்து எங்களை பாராட்டாவிடினும், இப்படி அவமதித்து மிரட்டுவதை எங்களால் ஏற்க முடியாது.
இப்படி உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் விதமான தங்களின் பேச்சிற்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என வலியுறுத்துகிறோம். அதிமுக பொதுச்செயலாளர் பழனிசாமி அவர்கள் மன்னிப்பு கேட்கத்தவறும் பட்சத்தில் அவருக்கு எதிராக தமிழ்நாடு தழுவிய போராட்டத்தை முன்னெடுப்போம்" என தெரிவித்துள்ளார்.