முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு தினத்தையொட்டி "போராளி ஓய்வதில்லை" என்ற தலைப்பில் சென்னை கிழக்கு மாவட்ட தி.மு.க சார்பில் திரு.வி.க. நகர் தொகுதியில் முன்கள பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மேயர் பிரியாராஜன் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு ஆ.ராசா எம்.பி பேசுகையில், ”அண்ணல் அம்பேத்கர் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை கொண்டு வந்த போது பலர் கடுமையாக எதிர்த்தனர்.
அப்போது அம்பேத்கர், இந்தியாவில் எங்கோ ஒரு தலைவன் இந்த சட்டத்தை நிறைவேற்றுவார் என சொன்னார். அதேபோல், இந்தியாவிலேயே முதன்முறையாக 1989 ஆம் ஆண்டு நமது முத்தமிழறிஞர் கலைஞர் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றினார்.
இந்தியா பயணிக்கும் திசையிலிருந்து முன்னோக்கி தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளுக்கு முன்பே கணித்தவர் கலைஞர். இப்படி கலைஞர் வழியில்தான் தற்போது நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தொலைநோக்கு பார்வையுடன் திட்டங்களை தீட்டி எல்லார்க்கும் எல்லாம் என்ற வகையில் செயல்பட்டு வருகிறார்.
நாடாளுமன்றத்தை பிரதமர் மோடி மதிப்பது கிடையாது. இதற்கு முன்பு இருந்த பிரதமர்கள் யாரும் கேள்வி நேரத்தின் போது அவைக்கு வராமல் இருந்தது இல்லை. ஆனால் 11 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியில் நாடாளுமன்ற கேள்வி நேரத்தில் பிரதமர் மோடியை யாரும் பார்த்ததே இல்லை. நாடாளுமன்றத்தில் சர்வாதிகாரம் கொடிக் கட்டி பறக்கிறது.
"டெல்லிக்கு நாங்கள் அவுட் ஆஃப் கண்ட்ரோல்.." என சொல்லும் ஒரே தலைவர் நமது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மட்டுமே" என தெரிவித்துள்ளார்.