சென்னை பெரம்பூரில் கட்டப்பட்டு வரும் சமுதாய நலக்கூடம், கொளத்தூர் சட்டமன்றத் தொகுதியில் கட்டப்பட்டு வரும் திரு.வி.க நகர் மற்றும் பெரியார் நகர் புதிய பேருந்து நிலையம், சேத்துப்பட்டில் கட்டப்பட்டு வரும் நவீன சலவைக் கூடத்தை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் பெருநகர் வளர்ச்சி குழும தலைவருமான சேகர் பாபு இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர் பாபு," சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் பேருந்து நிலையங்கள் மேம்படுத்தப்பட்டு வருகிறது.பெரியார் நகர் பேருந்து நிலையம், திரு.வி.க.நகர் பேருந்து நிலையத்தை செப்டம்பர் மாதம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைக்க இருக்கிறார்.
அதேபோல், ஆவடியில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் இன்னும் 3 மாதங்களில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்.
திமுக கூட்டணி கொள்கை கூட்டணி. அவர்களை போன்று சந்தர்ப்பவாத கூட்டணி கிடையாது. இந்தியாவிலேயே மக்கள் நலப் பணியில் முதன்மையாக இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். 2026 சட்டமன்ற தேர்தலில் மகத்தான வெற்றியை கொடுத்து திமுகவை மீண்டும் ஆட்சி கிரீடம் சூட மக்கள் தயராக இருக்கிறார்கள்.
2026ல் நிச்சயம் மாற்றம் வரும். தேர்தல் முடிந்தவுடன் விஜய் மீண்டும் சினிமாவிற்கு செல்கிறேன் என்ற மாற்றத்தை ஏற்படுத்துவார். அந்தர் பல்டி, ஆகாச பல்டி அடித்தாலும் மக்களிடம் எடுபடாது.” என தெரிவித்துள்ளார்.