சென்னை பறக்கும் ரயில் நிறுவனத்தை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கையகப்படுத்துவது குறித்து திமுக துணைப் பொதுச் செயலாளரும், திமுக நாடாமன்றக் குழுத் தலைவருமான கனிமொழி மக்களவையில் கேள்வி எழுப்பியிருந்தார்.
இது குறித்து அவர் எழுப்பியகேள்வியில் , "சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் (MRTS) எனப்படும் சென்னை பறக்கும் ரயில் திட்டத்தின் செயல்பாடு மற்றும் நிர்வாகத்தை இந்திய ரயில்வேயிடமிருந்து, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) க்கு மாற்றுவதற்கு அரசாங்கம் ஏதேனும் நடவடிக்கை எடுத்துள்ளதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன?
MRTS இன் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை CMRL க்கு முழுமையாக மாற்றுவதில் ஏற்பட்டிருக்கும் தாமதத்திற்கான காரணங்கள் என்ன? இந்த மாற்றத்தை சுமுகமாக செயல்படுத்துவதற்காக நிதி, செயல்பாடு மற்றும் சட்ட ரீதியான விவகாரங்களை அரசு பரிசீலித்து வருகிறதா? அப்படியானால், அதன் விவரங்கள் என்ன? MRTS நெட்வொர்க்கை CMRL க்கு முழுமையாக மாற்றுவதற்கான எதிர்பார்க்கப்படும் காலக்கெடு என்ன? இந்த ஒருங்கிணைப்பின் மூலம் ரயில் பயணிகளுக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன?” என்ற கேள்விகளை எழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்விகளுக்கு ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பதிலில், “தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசின் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் ஆகியவற்றின் வேண்டுகோளின் பேரில், ரயில்வே அமைச்சகம், தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) ஒரு ஆய்வினை நடத்துவதற்கு அனுமதியளித்தது.
இதன்படி ஓர் ஆலோசனை நிறுவனம் மூலமாக நடத்தப்பட்ட அந்த ஆய்வின் இறுதி அறிக்கை பிப்ரவரி, 2018 இல் சமர்ப்பிக்கப்பட்டது.இந்த குறித்து தமிழ்நாடு அரசு, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், ஒன்றிய நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், எம்.ஆர்.டி.எஸ். இல் சென்னை கடற்கரைக்கும் சென்னை எழும்பூருக்கும் இடையிலான 4வது பாதையின் (4 கி.மீ) கட்டுமானப் பணிகள் முடிந்த பின்னரே சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட், சென்னை மாஸ் ரேபிட் டிரான்சிட் சிஸ்டம் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்கான முன்மொழிவைத் தொடங்க முடியும் என்று முடிவு செய்யப்பட்டது.சென்னை கடற்கரைக்கும் சென்னை எழும்பூருக்கும் இடையிலான 4வது வழித்தடத்தின் பணிகள் ரூ. 279.80 கோடி செலவில் மார்ச் 2022 இல் ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்தப் பணிகள் மார்ச் 2025 இல் நிறைவடைந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
MRTS-ஐ தமிழ்நாடு அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதி செய்யும் முன்பு…. அதன் கட்டமைப்பு- நெறிமுறைகளுக்கு வடிவம் கொடுப்பதற்காக, ரயில்வே மற்றும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் (CUMTA) இடையே ஓர் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி ரயில்வே அதிகாரிகள் மற்றும் தமிழ்நாடு அரசு அதிகாரிகள் அடங்கிய சிறப்புக் குழு அமைக்கப்பட்டது.
இந்த சிறப்புக் குழு MRTS-ஐ அரசு தமிழ்நாடு அரசாங்கத்திடம் ஒப்படைப்பதற்கான விரிவான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கான பரந்த கட்டமைப்பு/ நெறிமுறைகளை தயாரித்துள்ளது. இணைப்பு என்பது ரயில்கள் இயக்கம், சொத்துக்கள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகிய கூட்டு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்களை உள்ளடக்கியது என்பதால் இதற்கான காலக்கெடுவை… இந்த நிலையில் நிர்ணயித்து சொல்ல இயலாது.
MRTS-ஐ தமிழ்நாடு அரசிடம் ஒப்படைப்பதன் மூலம் சென்னையில் உள்ள பல்வேறு போக்குவரத்து முறைகளின் சிறந்த ஒருங்கிணைப்பைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. இதனால் சென்னை மாநகர பயணிகளுக்கு பெரும் பயன் கிடைக்கும்” என்று பதிலளித்துள்ளார்.