உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள 24காலியிடங்களை நிரப்புவதற்கு மாநில அரசை அனுமதிக்குமாறு ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் ஜகத் பிரகாஷ் நட்டாவுக்கு,அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார்.
அதில், ”தமிழ்நாட்டில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளில் இடங்களை ஒப்படைப்பு செய்வது தொடர்பாக 11.06.2025 தேதியிட்ட கடிதத்தை நான் ஏற்கனவே அனுப்பியிருந்தேன்.
உச்சநீதிமன்றத்தின் ஆணையின்படி, தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில், உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளில் 50 விழுக்காடு இடங்கள் தமிழ்நாட்டில் அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு மட்டுமே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
எனினும், அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கான 24 பணியிடங்கள் காலியாக உள்ளன. விடுபட்ட சுற்றில் தரமுயர்த்தலை அனுமதிக்கின்ற 21.06.2025 தேதியிட்ட DGHS அறிவிப்பு உட்பட, கலந்தாய்வு வழிகாட்டுதல்களில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக, இந்த காலியிடங்களை நிரப்ப, கூடுதல் சுற்று கலந்தாய்வு கோரி தேர்வுக் குழுவுக்கு கோரிக்கைகள் வந்துள்ளன.
எனவே, உயர் சிறப்பு முதுநிலை மருத்துவ படிப்புகளில் காலியாக உள்ள 24 காலியிடங்களை நிரப்புவதற்கு, அரசுப் பணியில் உள்ள மருத்துவர்களுக்கு நீட்டிக்கப்பட்ட சுற்று கலந்தாய்வை நடத்தவும், இந்த செயல்முறையை 2025 ஆகஸ்ட் 5 ஆம் தேதி அல்லது அதற்கு முன்னர் முடிக்கவும், மாநில அரசை அனுமதிக்குமாறு தாங்கள் தனிப்பட்ட முறையில் தலையிட்டு உறுதி செய்யவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் இது, தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவ நிலையங்களில் நிபுணர்களின் எண்ணிக்கையை வலுப்படுத்த உதவும்” என தெரிவித்துள்ளார்.