தமிழ்நாடு

“நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!

எந்த இயக்கத்திலும் இளைஞர் அணியில் 5 லட்சம் நிர்வாகிகள் கிடையாது, இந்தியாவிலேயே அசைக்க முடியாத இயக்கமாக நம் திராவிட முன்னேற்றக் கழகத்தை மாற்றுவோம் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சூளுரை!

 “நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சென்னையில், சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி புதிய நிர்வாகிகளுக்கான அறிமுகக் கூட்டம், அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் துணை முதலமைச்சரும் கழக இளைஞர் அணிச் செயலாளருமான  உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு சிறப்புமிக்க உரையாற்றினார். 

அப்போது அவர், ``இந்தச் சிறப்புக்குரிய கூட்டத்தில், 2026 சட்டமன்றத் தேர்தலில் கழகம் பெறப்போகிற மாபெரும் வெற்றிக்கு, இளைஞர் அணி நிர்வாகிகளின் உழைப்பு பெரும் ஆற்றலாக இருக்க வேண்டும்’’ என்று குறிப்பிட்டார்.

துணை முதலமைச்சரும் கழக இளைஞர் அணிச் செயலாளருமான  உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய சிறப்புமிக்க உரையின் விவரம் வருமாறு:


சென்னை மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் உங்களை எல்லாம் சந்தித்து உரையாற்றுவதில் மிகுந்த மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். குறிப்பாக, இங்கு வந்திருக்கின்ற புதிய வட்ட இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், பாக இளைஞர் அணி அமைப்பாளர்கள் அத்தனை பேரையும் வருக, வருக என வரவேற்கிறேன். 

தமிழ் மக்களின் பேரன்பு  

இந்த நேரத்தில் முக்கியமான செய்தியை உங்களிடம் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  கடந்த மூன்று நாட்களாக பல்வேறு மாவட்டங்களுக்கு கழக நிகழ்ச்சிக்காக சென்றுகொண்டு இருக்கிறேன். நேற்று  முன்தினம்  திருவள்ளூர் மாவட்டம், நேற்று சென்னை கிழக்கு மாவட்டம், இன்றைக்கு (25.07.2025) சென்னை மேற்கு மாவட்டம். போகின்ற வழியெல்லாம், நம் கழகத்தினர், பொதுமக்கள், பொதுவாக தாய்மார்கள் எனக்கு வரவேற்பு கொடுத்துவிட்டு, எனது கைகளைப் பிடித்துக்கொண்டு அப்பா எப்படி இருக்கிறார் என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.

தன் சொந்த குடும்பத்தில் ஒரு சகோதரனைப்போல நம் முதலமைச்சர் அவர்கள் மீது தமிழ்நாட்டில் இருக்கின்ற அத்தனைக் குடும்பங்களும் அன்பையும், பாசத்தையும் காட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உங்கள் அத்தனைப்பேருக்கும் இந்த நேரத்தில் நான் தெரிவித்துக்கொள்வது நம் தலைவர் அவர்கள் நலமாக இருக்கிறார். இன்னும் 3 நாட்களில் விரைவில் அவர் வீடு திரும்புவார்.  அதற்குக் காரணம் மருத்துவர்களின் சிகிச்சை மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் நீங்கள் நம் தலைவரின் மீது வைத்து இருக்கின்ற பேரன்பும்தான் காரணம்.  

 “நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!

முதல் நிகழ்ச்சி - சென்னை மேற்கு

சென்னை மேற்கில் உள்ள கழக வட்டங்கள் மற்றும் பாகங்களுக்கான இளைஞர் அணி நிர்வாகிகள் பட்டியல், இன்று காலைதான் முரசொலியில் வெளியானது. காலையில் அறிவிப்பு வந்து, மாலையில் 99 சதவிகித வருகையுடன் நடக்கின்ற நிகழ்ச்சி என்றால், அது இந்த நிகழ்ச்சிதான்.  

இன்னும் பெருமை என்னவென்றால், தமிழ்நாடு முழுக்க இருக்கின்ற அனைத்து மாவட்டங்களிலும் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்த போகிறோம். தமிழ்நாடு முழுக்க நான் கலந்துகொள்ளப் போகிறேன்.  அப்படி நான் கலந்து கொள்கின்ற முதல் நிகழ்ச்சி, இந்த சென்னை மேற்கு மாவட்டத்தில் சிறப்பாக நடைபெற்றுக்கொண்டு இருக்கிறது. தமிழ்நாட்டிலேயே முதல் மாவட்டம் என்ற பெருமை உங்களுக்கு இருக்கிறது.  


இந்த நேரத்தில் நம் அண்ணன் தயாநிதி மாறன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார்.  இளைஞர் அணிச் செயலாளரால் உருவாக்கப்பட்டு, வளர்த்தெடுக்கப்பட்ட மாவட்டச் செயலாளர் என்று சொன்னார். அதில் ஒரு சின்ன திருத்தம். சிற்றரசு எனக்கு சீனியர்.  இந்த நேரத்தில் நாம் அத்தனை பேரும் அவருக்கு வாழ்த்துச் சொல்ல வேண்டும். நம்  பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். இந்த நிகழ்ச்சியை குறுகிய காலத்தில் சிறப்பாக ஏற்பாடு செய்ததற்காக மட்டுமல்ல, அவர் இளைஞர் அணியில் இருந்து மாவட்டச் செயலாளராக பொறுப்பேற்று, ஐந்து ஆண்டுகள் முடிந்து, இன்றுடன் ஆறாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார்.  அதனால்தான் இந்தத் தேதியைக் கேட்டு வாங்கினாரா என்றுகூட எனக்கு சந்தேகமாக இருக்கிறது.

முத்தமிழறிஞர் கலைஞர் இல்லம்

சென்னை மேற்கு மாவட்டத்திற்கு பல்வேறு சிறப்புகள் இருக்கின்றன. இந்த நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும், நம் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் அமைந்துள்ளது சென்னை மேற்கு மாவட்டத்தில்தான். சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, அண்ணா நகர் சட்டமன்றத் தொகுதிகள் எல்லாம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் நின்று வென்ற தொகுதிகள். நம் தலைவர் அவர்கள் பலமுறை ஆயிரம்விளக்கு தொகுதியில் நின்று வென்றவர். அதுவும் இந்த சென்னை மேற்கு மாவட்டம்தான். இன்றைக்கு என்னை ஒரு சட்டமன்ற உறுப்பினராக அனுப்பி இருப்பதும், இந்த சென்னை மேற்கு மாவட்டம்தான். நம் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதிதான். கோபாலபுரத்தில் முத்தமிழறிஞர் கலைஞர் இல்லம் இருப்பதும், இந்த சென்னை மேற்கு மாவட்டத்தில்தான். அப்படிப்பட்ட பெருமைமிகு சென்னை மேற்கு மாவட்டத்தின் நிர்வாகிகளான உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

 நான் பேச நினைத்ததையெல்லாம், எனக்கு முன்பே பேசி, அனைவரும் பேசி விட்டார்கள். இருந்தாலும், சில விஷயங்கள் மட்டும் உங்களுடன் பேசி, உங்கள்  அனைவரோடும் புகைப்படம் எடுத்துக் கொள்ள இருக்கிறேன். என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள  நீங்கள் எவ்வளவு ஆர்வத்துடன் இருக்கிறீர்களோ, அதேபோல் உங்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்ள நானும், ஆர்வமாக இருக்கிறேன். அதனால், எனது பேச்சைக் குறைத்துக்கொண்டு, உங்களுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வதில் நேரத்தை அதிகமாக எடுத்துக் கொள்வதற்கு முடிவு செய்திருக்கிறேன்.

 “நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!

எனக்குப் பெருமைதான்


நான் அடிக்கடி சொல்வதுண்டு, மீண்டும் சொல்வதில் எனக்குப் பெருமைதான். எத்தனையோ நிகழ்ச்சிகளுக்குச் சென்றாலும், இளைஞர் அணி நிகழ்ச்சிக்கு வரும்பொழுது மட்டும் ஒரு தனி உற்சாகம் பிறந்துவிடும். வெளியே சொல்ல முடியாத ஒரு உணர்வு ஏற்பட்டு விடும்.

இது அறிமுகக் கூட்டம் என்று கூறியிருக்கிறார்கள். ஆனால் உங்களில் பல பேரை என்னால் பெயர் சொல்லியே அழைக்க முடியும். அந்த அளவுக்கு நீங்கள் எனக்கு ஏற்கெனவே அறிமுகம் ஆனவர்கள்தான். அதனால் நமக்குள் அறிமுகம் தேவை இல்லை. உங்கள் ஒவ்வொருவரையும் பார்க்கும் பொழுது, எனது தம்பியாகத்தான் உங்களைப் பார்க்கிறேன்.

சட்டமன்ற உறுப்பினர்,  விளையாட்டுத் துறை அமைச்சர், இப்போது துணை முதலமைச்சர் என  இப்படி எத்தனையோ பொறுப்புகளை தலைவர் அவர்கள் என்னிடம் கொடுத்தாலும், என் மனதிற்கு மிகவும் நெருக்கமான, உணர்வுபூர்வமான பொறுப்பாக நான் எதைப் பார்க்கிறேன் என்றால், கழக இளைஞர் அணியின் செயலாளர் என்ற பொறுப்பைத்தான்.

நம் இளைஞர் அணிக்கு என்று, தனி வரலாறு உண்டு. அதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற, அனைத்துக் கட்சிகளிலும் இளைஞர் அணி இருக்கிறது. ஆனால், இந்தியாவிலேயே ஒரு கட்சிக்கு இளைஞர் அணியைத் தொடங்கியது யார் என்று கேட்டீர்கள் என்றால், நம் கழகத் தலைவர் அவர்கள்தான்.

46-வது ஆண்டில் வெற்றிநடை 

1980-ஆம் ஆண்டு நம் இளைஞர் அணியைத் தொடங்கியவர் நம் கழகத் தலைவர் அவர்கள். முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் கழகத்தின் முதன்மையான, பாராட்டைப் பெற்றது நம் இளைஞர் அணி. அப்படிப்பட்ட இளைஞர் அணியில் இருப்பது, நமக்கெல்லாம் கூடுதல் பெருமை. இப்போது இளைஞர் அணி 45 ஆண்டுகளைக் கடந்து 46-வது ஆண்டில் அடியெடுத்து வைத்து வெற்றிநடை போட்டுக் கொண்டிருக்கிறது.

கோபாலபுரத்தில் ஒரு சிறிய சலூன் கடையில் தொடங்கப்பட்ட நமது இளைஞர் மன்றம், இன்றைக்கு இளைஞர் அணியாக  உதயமாகி, இந்த அளவிற்கு  வளர்ந்து நிற்கிறது. இளைஞர் அணியின் வளர்ச்சிக்கு எப்போதும் துணை நின்ற மாவட்ட - பகுதி நிர்வாகிகளும் பலர் இங்கு வந்திருக்கிறீர்கள். உங்கள் அத்தனை பேருக்கும் மீண்டும் எனது அன்பையும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இளைஞர் அணையில் நிறைய நிர்வாகிகளைக் கொண்டு வர வேண்டும், அது நம் கழகத்திற்கு மேலும் வலுசேர்க்க வேண்டும் என்று, கடந்த 2020-ஆம் ஆண்டு கழக இளைஞர் அணிக்கு மாவட்ட மாநகர வட்ட நகர, பேரூர் வார்டுகள், ஊராட்சிக் கிளைகள் வரை, நிர்வாகிகளை நியமித்தோம். பல்வேறு அமைப்புகளுக்கும் நிர்வாகிகளை நியமித்தோம். இப்போது வட்ட அளவிலான அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், பாக அளவிலான இளைஞர் அணி அமைப்பாளர்களையும் நியமனம் செய்யும் பணியை தமிழ்நாடு முழுக்க தொடங்கி இருக்கிறோம்.

 “நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!

இளைஞர் அணி மட்டும்தான்

இந்தியாவிலேயே எந்த அணியும் செய்யாத வகையில், பாகம் வரை நிர்வாகிகளை நியமித்த அணி என்ற பெருமையும் நம் கழக இளைஞர் அணிக்குத்தான் சேரும். இன்றைக்குப் பல இயக்கங்கள் பூத் ஏஜெண்டுகளை நியமிக்கவே சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாதிரி நிலைமையில், பல கட்சிகள் சிரமப்படுகின்ற வேளையில், பூத்துக்கு ஒரு இளைஞர் அணி நிர்வாகியை நியமித்தது நம் இளைஞர் அணி மட்டும்தான்.

இங்கு வருகை தந்துள்ள வட்ட அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆகட்டும், புதிதாக நியமிக்கப்பட்டுள்ள பாக அமைப்பாளர்கள் பொறுப்புக்கு வந்துள்ளவர்களாகட்டும், நீங்கள் எல்லாம் சாதாரணமாக வந்துவிடவில்லை. முதலில் உங்கள் மாவட்டக் கழகச் செயலாளர் பகுதிக் கழகச் செயலாளர் வட்டக் கழகச் செயலாளர்களிடம் கடிதங்களைப் பெற்று, அந்தப் பரிந்துரைகள் மூலம் சம்பந்தப்பட்ட நபர்களை, அன்பகத்திலிருந்து தொடர்புகொண்டு பேசினோம். அப்படிப் பேசும்போது, உங்களின் ஒவ்வொருவரின் பின்புலம், உங்களின் கட்சி உழைப்பு, கொள்கைப் பிடிப்பு போன்றவற்றைத் தெரிந்துகொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக எங்களுக்கு அமைந்தது.

இப்படிப் பல்வேறு கட்டங்களில் உங்களின் பணிகளை எல்லாம் ஆய்வு செய்துதான் உங்களை இன்றைக்கு இந்தப் பொறுப்புக்கு நியமித்திருக்கிறோம். ஆகவே நான் திரும்பவும் சொல்கிறேன், நீங்கள் சாதாரணமாக இந்த இடத்திற்கு வரவில்லை. உங்களின் உழைப்புதான் உங்களை இந்த இடத்திற்குக் கொண்டு வந்திருக்கிறது. இதை உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும். உங்களுக்குக் கிடைத்திருப்பது பதவியல்ல, பொறுப்பு என்பதை நீங்கள் நன்கு உணர வேண்டும்.

 “நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!

மேடையிலேயே முன்னுதாரணங்கள்

இளைஞர் அணியில் சரியாக உழைத்தீர்கள் என்றால் அதற்கான அங்கீகாரம் நிச்சயமாக உங்களுக்கான உரிய நேரத்தில் உங்களைத் தேடி வரும். அதற்கு இந்த மேடையே சாட்சி. மாவட்டக் கழகச் செயலாளர் சிற்றரசு அவர்கள், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக சிறப்பாகப் பணியாற்றி இன்றைக்கு மாவட்ட கழகச் செயலாளராக பதவி உயர்வு பெற்றிருக்கிறார். ஆயிரம் விளக்கு கிழக்குப் பகுதிக் கழகச் செயலாளராக இருக்கின்ற, அண்ணன் மா.ப.அன்புதுரை அவர்கள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளராகப் பணியாற்றியவர். அண்ணா நகர் வடக்குப் பகுதிக் கழகச் செயலாளர் அண்ணன் பரமசிவம் அவர்கள் பகுதி இளைஞர் அணி அமைப்பாளராக இருந்தார். இப்படி பல்வேறு நிர்வாகிகள் உங்களுக்கெல்லாம் முன்னுதாரணமாக இந்த மேடையிலேயே இருக்கிறார்கள்.

இந்த மண்டலத்தில் இளைஞர் அணியின் பணிகளை ஒருங்கிணைக்கக்கூடிய மாநில இளைஞர் அணி துணைச் செயலாளர் ஜோயல் அவர்கள், மாவட்ட அமைப்பாளராக இருந்து, தலைவர் அவர்கள் இளைஞர் அணிச் செயலாளராக இருக்கும்போது, மாநில துணைச் செயலாளராக சிறப்பாகப் பணியாற்றி, இன்றைக்கு எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். அதேபோல் மற்ற எட்டு மாநில துணைச் செயலாளர்களும் மாவட்ட அமைப்பாளர்களாக, துணை அமைப்பாளராக சிறப்பாகச் செயல்பட்டு, இன்றைக்கு தலைவர் அவர்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள்.

மாவட்ட அமைப்பாளர் சகோதரர் பிரகாஷ் அவர்கள்,  பகுதி அமைப்பாளராக சிறப்பாகச் செயல்பட்டு, இன்றைக்கு மாவட்ட அமைப்பாளராகப் பொறுப்பேற்றிருக்கிறார். இளைஞர் அணியில் இருந்து வந்தவர்தான் இன்றைக்கு மாண்புமிகு அமைச்சர்களாக, சட்டமன்ற உறுப்பினர்களாக, மாவட்ட- ஒன்றிய- நகர- பகுதிக் கழகச் செயலாளர்களாக இருக்கிறார்கள். நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். உள்ளாட்சிப் பிரதிநிதிகளாகவும் இன்றைக்கு பலபேர் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்கள். கழகத்திற்கு நம் தலைவரைக் கொடுத்ததும் இந்த இளைஞர் அணிதான். அப்படிப்பட்ட ஒரு சிறப்பு வாய்ந்த அணிக்கு நீங்கள் வந்திருக்கிறீர்கள். ஆகவே, நீங்கள் உழைக்க தயாராக இருந்தால், நாங்கள் உங்களை உயர்த்த தயாராக இருக்கிறோம்.

நீங்கள் பதிவு செய்யுங்கள்

ஏதோ பொறுப்பு வாங்கி விட்டோம்,  நான்கு ஃபிளக்ஸ் பேனர் வைத்து விட்டோம், போஸ்டர் அடித்து விட்டோம், போட்டோ எடுத்து வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டோம் என்பது மட்டும் நம் வேலை கிடையாது. உங்களின் ஒவ்வொரு பணியையும் உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்ற மினிட் புக்கில் தயவுசெய்து பதிவு செய்யுங்கள். நீங்கள் நடத்துகின்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, நீங்கள் கலந்து கொள்கின்ற நிகழ்ச்சியாக இருந்தாலும் சரி, அவற்றையெல்லாம் மினிட் புக்கில் தயவு செய்து நீங்கள் பதிவு செய்யுங்கள். நாளைக்கு யாராவது உங்கள் மீது குறை சொன்னார்கள் என்றால், இவர் எந்த நிகழ்ச்சிக்கும் வரவில்லை, எந்த நிகழ்ச்சியையும் இவர் நடத்தவில்லை என்று யாராவது சொன்னால், அதை மறுத்து நீங்கள் செய்த பணிகளை நிரூபிக்க உங்களிடம் இருக்கின்ற ஒரே ஆதாரம் மினிட் புக் தான். ஆகவே மினி புத்தகங்களை நீங்கள் சரியாக பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். 

ஒரு சிறு தவறுக்கு கூட நீங்கள் இடம் கொடுக்கக்கூடாது. இன்றைக்கு இருக்கின்ற தொழில்நுட்ப யுகத்தில் எல்லோர் கையிலும் அலைபேசி இருக்கிறது. எதிர்க்கட்சிகள் நம் இளைஞர் அணியைப் பற்றி பேசுவதற்கு ஏதாவது ஒரு சின்ன தவறு கிடைத்துவிடாதா என்று காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏதாவது அவதூறு படம் பரப்ப வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.  இதையெல்லாம் நீங்கள் உணர வேண்டும்.


இங்கு இருக்கின்ற ஒவ்வொருவரும் உங்கள் பொறுப்பில் உங்கள் கட்டுப்பாட்டில் நூறு வாக்குகளை வைத்து இருந்தீர்கள் என்றால், உங்களை யாராலும் தவிர்க்க முடியாது. நீங்கள் சொன்னால் நூறு பேர் கழகத்திற்காக வாக்களிப்பார்கள் என்ற நிலைமையை நீங்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.


எந்தப் பணியை செய்தாலும் அதை மாவட்டப் பகுதிக் கழகச் செயலாளர்களிடம் சொல்லிவிட்டு, அவர்களின் ஆலோசனை பெற்று செய்ய வேண்டும். அதேபோல் மாவட்டச் செயலாளர், பகுதி செயலாளர்களின் அனுமதியையும் வாங்க வேண்டும். சமூக வலைதளங்களிலும் நீங்கள் துடிப்போடு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

உங்களுக்கு அன்பகத்திலிருந்து வரும் அறிவுரைகளைப் பின்தொடருங்கள். தலைவரின் பக்கம், நம் இளைஞர் அணி பக்கம், மாவட்டச் செயலாளர் பக்கத்தைத் தொடர்ந்து பின்பற்றுங்கள். அப்போதுதான் கழகம் என்னென்ன செய்து கொண்டிருக்கிறது, இன்றைக்கு தலைவர் அவர்கள் என்னென்ன அறிக்கை விட்டிருக்கிறார்கள், தலைவர் என்ன சொல்லியிக்கிறார் என்பதை, மக்களிடம் நீங்கள் கொண்டுபோய் சேர்க்க முடியும்.

தயவுசெய்து தினமும் முரசொலியைப் படியுங்கள். முரசொலியில் வருகின்ற கடைசி பக்கம் இளைஞர் அணிக்கான பக்கம். `பாசறைப் பக்கம்’ என்று வந்து கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் தொடர்ந்து படிக்க வேண்டும். இங்கே நிர்வாகிகளின் பெயர்களைச் சொல்லும் போது கைதட்டி விசில் அடித்தீர்கள். முழக்கம் போட்டீர்கள். உணர்வுபூர்வமாக கத்துகிறீர்கள், ஆனால், நாம் அதற்காக கூடிய கூட்டம் கிடையாது, நம் கழகத்தின் வரலாற்றை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

நம் கழகத்திற்குத்தான் மிகப்பெரிய வரலாறு இருக்கிறது. நம் கழகத்தின் கொள்கைகளை நீங்கள் விரல் நுனியில் வைத்துக் கொள்ள வேண்டும். அதற்காக கூடியிருக்கின்ற கூட்டம்தான் இந்த இளைஞர் அணி கூட்டம். இங்கு பகுதி செயலாளர்கள், வட்டக் கழகச் செயலாளர்கள் வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு எனது பணிவான வேண்டுகோள்.

 “நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!

புதிய பொறுப்புகளுக்கு வந்திருக்கின்ற தம்பிகளுக்கு அரசியல் அனுபவம் எல்லோருக்கும் பெரிதாக இருக்காது. முதல் தலைமுறையாக கூட அரசியலுக்கு சில பேர் வந்து இருப்பார்கள். ஆகவே அவர்கள் ஏதாவது சிறு சிறு தவறுகள் செய்தால், ப்ரோட்டாகால்  (Protocal) தெரியாமல் நடந்து கொண்டால், அவர்களை தயவுசெய்து புறக்கணிக்காதீர்கள். அவர்களை நீங்கள்தான் நல்வழிப்படுத்த வேண்டும். அவர்களோடு இருந்து வழி காட்டுங்கள் என்று உங்களையெல்லாம் கேட்டுக்கொள்கிறேன்.

இன்றைக்கு சென்னை மேற்கு மாவட்டம் மட்டுமல்ல, அடுத்து, தமிழ்நாடு முழுக்க உள்ள ஊராட்சி, கிளைகள் தோறும், இளைஞர் அணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் நிர்வாகிகளை நியமித்தால், இளைஞர் அணியில் மட்டும் 5 லட்சம் பேர் நிர்வாகிகளாக இருப்பார்கள்.

அசைக்க முடியாத ஒரு இயக்கம்

 இந்தியாவிலேயே எந்த இயக்கத்திலும் இளைஞர் அணியில் மட்டும் 5 லட்சம் பேர் நிர்வாகிகளாக இருந்தது கிடையாது. அந்தப் பெருமை நம் இயக்கத்திற்கு வர இருக்கிறது. அப்படி ஒரு நிலைமை உருவாகியது என்றால், இந்தியாவிலேயே அசைக்க முடியாத ஒரு இயக்கமாக நமது திராவிட முன்னேற்றக் கழகம் மாறும். இதையெல்லாம் நீங்கள் மனதில் வைத்து உங்களின் பணிகளை மேற்கொள்ளுங்கள்.

மக்களை தினசரி சந்தித்துப் பேசுங்கள். நம்மிடம் கொள்கைகள் இருக்கிறது, திராவிட மாடல் அரசின் திட்டங்கள் இருக்கிறது. அதையெல்லாம் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள். அதைப் பற்றி மக்களிடம் தினமும் பேசுங்கள்.

இன்றைக்கு நம் திராவிட மாடல் அரசின் திட்டங்களை இந்தியாவே பாராட்டிக் கொண்டிருக்கிறது. இன்று காலை `இந்தியா டுடே’ பத்திரிகையில் ஒரு செய்தி வந்தது. அவர்கள் எடுத்த  கணக்கெடுப்பில் 2011-இல் இருந்து 2021 வரைக்கும் தமிழ்நாடு பல்வேறு துறைகளில் பின்தங்கி இருந்திருக்கிறது. ஆனால் கடந்த ஐந்து வருடங்களில் பல துறைகளில் நம் அரசின் திட்டங்களால் இன்றைக்கு தமிழ்நாடு முதலிடத்திற்கு வந்து இருக்கிறது என்று `இந்தியா டுடே’ ஆய்வு சொல்கிறது.

 “நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!



பல்வேறு தொல்லைகள்

இந்தியாவில் முதல் ஐந்து முதலமைச்சர்களில் நம் தலைவரின் பெயரும் இடம் பெற்றிருக்கிறது. இதையெல்லாம் மக்களிடம் கொண்டு போய் சேருங்கள். இதையெல்லாம் பொறுக்க முடியாமல்தான் ஒன்றிய பா.ஜ.க. அரசு, நமக்கு பல்வேறு வகைகளில் தொல்லை கொடுத்துக்கொண்டு வருகிறது. நிதி உரிமையைத் தொடர்ந்து பறித்துக் கொண்டிருக்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை என்று சொல்லி இந்தியையும் சமஸ்கிருதத்தையும் மீண்டும் தமிழ்நாட்டிற்குள் திணிக்கப் பார்க்கிறார்கள். தொகுதி மறுவரையறை என்ற பெயரில் தமிழ்நாட்டில் இருக்கின்ற 39 மக்களவைத் தொகுதிகளை, 31 தொகுதிகளாக குறைக்க முயற்சிக்கிறார்கள். இதையெல்லாம் எதிர்த்துக் குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவர், நம் தலைவர் என்பதை நீங்கள் உணர வேண்டும்.

தமிழ்நாட்டில்  ஓரணியில் தமிழ்நாடு என்ற முன்னெடுப்பை நம் முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்கள். அந்த முன்னெடுப்பிலும், நம் இளைஞர்  அணியினர் முக்கியமான பங்கு வகிக்கிறோம். இன்றைக்கு ஓரணியில் தமிழ்நாடு மூலமாக, கிட்டத்தட்ட 2 கோடி உறுப்பினர்களை நம் கழகத்தில் இணைத்து இருக்கிறோம்.  இந்தப் பணியிலும் இளைஞர் அணி சார்பாக பாக அளவில் சமூக வலைதள பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்கள் இடம் பெற்றிருக்கிறீர்கள். அதில் எனக்கு கூடுதல் மகிழ்ச்சி, கூடுதல் பெருமை.

ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை பணியில், இளைஞர் அணி தம்பிகள் முழு வீச்சில் ஈடுபட்டு வருகிறார்கள் என்ற செய்தியை கேட்கும்பொழுது, மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி 

இன்னொரு மகிழ்ச்சியான செய்தி. தேர்தலுக்காக  சட்டமன்ற தொகுதிகளை 8 மண்டலமாக பிரித்து இருக்கிறார் நம் தலைவர் அவர்கள். அதில் சென்னை மண்டலத்தில் 30 தொகுதிகள் இருக்கிறது. அந்த 30 தொகுதிகளில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி இன்றைக்கு ஒன்பதாவது இடத்தைப் பிடித்து இருக்கிறோம். அந்தப் பணிகளை இன்னும் விரைவுபடுத்த வேண்டும் என்று இந்த நேரத்தில் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

இன்று தமிழ்நாட்டு மக்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தேடி சாரைசாரையாக வருகிறார்கள். இதைப் பார்த்துதான், அ.தி.மு.க.-வுக்கும் பா.ஜ.க.-வுக்கும் கொஞ்சம் பயம் வந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமி அவர்கள் எங்கு சென்றாலும் நம் ஓரணியில் தமிழ்நாடு பற்றிதான் புலம்பிக் கொண்டிருக்கிறார். தமிழகத்தை மீட்போம் என்று அவர் சொல்லிக் கொண்டிருக்கிறார். எடப்பாடி பழனிசாமி அவர்களே, நீங்கள் முதலில் பா.ஜ.க.-விடமிருந்து அ.தி.மு.க.-வை மீட்டெடுங்கள், அந்த வேலையைப் பாருங்கள் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி திரும்பவும் ஆட்சிக்கு வந்தால் தமிழ்நாட்டிற்குள் இந்தி திணிப்பு வரும். தொகுதி  மறு வரையறை வரும். புதிய கல்விக் கொள்கை வரும். இதெல்லாம் வரக்கூடாது என்றால் மீண்டும் நம் கழகத் தலைவர் அவர்கள் முதலமைச்சராக வேண்டும். ஆகவே இதையெல்லாம் உணர்ந்து நீங்கள் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 “நீங்கள் முதலில் பாஜகவிடமிருந்து, அதிமுக-வை மீட்டெடுங்கள்” : பழனிசாமிக்கு, துணை முதல்வர் பதிலடி!

 பா.ஜ.க.- அ.தி.மு.க. கூட்டணியை வீழ்த்துவதற்கான போரில் நம் இளைஞர் அணி முன் வரிசையில் நிற்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். வர இருக்கின்ற சட்டமன்ற தேர்தலில், 200-க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் என்று, நம் தலைவர் அவர்கள் இலக்கு நிர்ணயித்துள்ளார்.

நம் தலைவர் அணி

நம் இளைஞர் அணி தம்பிமார்கள் இன்று வந்திருக்கின்ற அதே சுறுசுறுப்புடன் அடுத்த ஒன்பது மாதங்கள் நீங்கள் களத்தில் இருந்தீர்கள் என்றால், 200-ஐ விட அதிகமான தொகுதிகளில் தமிழ்நாட்டு மக்கள் நம் திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிபெற வைப்பார்கள், அதற்குத் தொடக்கமாக சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர் இந்த மூன்று தொகுதிகளும், மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுகாட்ட வேண்டும்.

இந்த மூன்று தொகுதிகளிலும் கழகம் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான காரணம், இளைஞர் அணியினரின் உழைப்பு என்று நாளைக்கு உங்கள் மாவட்ட கழகச் செயலாளர் சொல்ல வேண்டும்.  இதை இளைஞர் அணியினர் ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு, செய்துகாட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

நாம் இளைஞர் அணி என்று பெருமையாகச் சொன்னாலும் ஒன்றை மட்டும் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். நாம் அனைவரும் கலைஞர் வழியில் வந்த, நம் தலைவர் அணி என்பதை  நீங்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

 2026-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகம் ஏழாவது முறையாக ஆட்சியில் அமர வேண்டும் என்றால், நம் தலைவர் அவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதலமைச்சராக வேண்டும் என்றால், இளைஞர் அணி தம்பிமார்கள் நீங்கள் அடுத்த ஒன்பது மாதம் களத்தில் இறங்கி, இந்தப் பிரச்சாரத்தை நீங்கள் மேற்கொள்ள வேண்டும், புதிய வட்ட மற்றும்  பாக இளைஞர் அணி அமைப்பாளர்கள் துணை அமைப்பாளர்கள், உட்பட இன்று வருகை தந்துள்ள ஆயிரத்துக்கும் அதிகமான சென்னை மேற்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் உங்கள் அனைவரின் பணிகளும் சிறக்கட்டும். 

banner

Related Stories

Related Stories