நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. பிரதான் மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா (PMKVY) திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள பயிற்சி மையங்கள் எத்தனை, அதில் அளிக்கப்படும் பயிற்சி விவரங்கள் மற்றும் அவற்றின் தற்போதைய நிலை என்ன என்பது குறித்து திமுக மக்களவை உறுப்பினர்கள் சி. என். அண்ணாதுரை மற்றும் ஜி. செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் இத்திட்டத்தின்கீழ் உருவாக்கப்படும் மையங்கள் எந்தெந்த மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ளன? தமிழ்நாட்டில் கடந்த மூன்றாண்டுகளாக இதற்காக ஒதுக்கப்பட்ட நிதி மற்றும் பயன்படுத்தப்பட்ட நிதி விவரங்கள், பயிற்சி பெற்ற பயனாளிகளின் எண்ணிக்கை விவரங்கள் என்ன?
தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள், வணிக சங்கங்கள் அல்லது தனியார் துறை முதலாளிகளுடன் இப்பயிற்சிக்காக அரசு செய்துள்ள ஒப்பந்தங்களின் விவரங்கள் என்ன?. மற்றும் தமிழ்நாட்டில் PMKVY பயனாளிகளுக்கு சிறந்த வேலைவாய்ப்பை உறுதி செய்வதற்காக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? போன்ற கேள்விகளையும் அவர்கள் எழுப்பியுள்ளனர்.
தமிழ்நாட்டில் ஐடிஐகளின் செயல்பாடுகள்
தமிழ்நாட்டில் செயல்படும் தொழில் பயிற்சி மையங்களின் (ஐடிஐ) விவரங்கள் குறித்து நாடாளுமன்றத்தில் தருமபுரி மக்களவை உறுப்பினர் அ. மணி கேள்வி எழுப்பியுள்ளார். தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் தொழில் பயிற்சி மையங்களின் எண்ணிக்கை மற்றும் விவரங்கள், அதில் வழங்கப்படும் படிப்புகள் மற்றும் சேர்க்கை விவரங்கள் என்ன?
ஐடிஐகளில் கிடைக்கும் பயிற்சி மற்றும் உள்கட்டமைப்பின் தரத்தை அரசாங்கம் எவ்வாறு மதிப்பீடு செய்கிறது? புதிதாக தமிழ்நாட்டில் ஒன்றிய அரசாங்கம் நிறுவ முன்மொழிந்துள்ள ஐடிஐகளின் விவரங்கள் என்ன? பயிற்சி தரங்களை மேம்படுத்த, வேலைவாய்ப்பை உறுதி செய்ய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன? என்றும் அவர் கேட்டுள்ளார்.
தங்க நகைக்கடன் விதிமுறைகளை மறுபரிசீலனை செய்க!
தங்க நகைகள் மீது வங்கிகள் கடன் வழங்குவதற்கான விதிமுறைகளில் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்த இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) வரைவு வழிகாட்டுதல்களை மறுபரிசீலனை செய்யக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் ஒன்றிய அரசுக்கு எழுதிய கடிதத்தை சுட்டிக்காட்டி திமுக மக்களவை உறுப்பினர்கள் தங்க தமிழ்செல்வன் மற்றும் கணபதி ராஜ்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்கள்.
தங்கப் பாதுகாப்பு வழிகாட்டுதல்கள் 2025 ஐ மறுபரிசீலனை செய்ய வேண்டும், 2 லட்சம் வரையிலான விவசாயம் மற்றும் விவசாயம் தொடர்பான கடன்களுக்கு தங்கத்தை பிணையமாக ஏற்றுக்கொள்வதை தொடர வேண்டும். மேலும் கடன் வழங்குவதற்கான விதிமுறைகளின் மீதான கட்டுப்பாடுகளை தளர்த்துமாறும் RBI-க்கு அறிவுறுத்தச் சொல்லி ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு முதலமைச்சர் எழுதிய கடித்தத்திற்கு ஒன்றிய அரசின் பதில் என்ன? என்று அவர்கள் கேட்டுள்ளனர்.