சென்னை மாநகராட்சிக்குட்பட்ட முக்கிய சாலைகள், கடற்கரை ஆகிய பகுதிகளில் மாநகராட்சி சார்பில் வாகன நிறுத்த வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. இந்த பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தனியாருக்கு ஒப்படைக்கப்பட்டது.
அதன் படி கடந்த களங்களில் பல்வேறு பகுதிகளில் வாகன நிறுத்தக் கட்டண வசூல் பணியானது தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிறுவனத்துடனான ஒப்பந்தம் நேற்றுடன் முடிவடைந்தது.
இதனையொட்டி சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் வாகன நிறுத்தத்திற்கான ஒப்பந்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சியின் சார்பில் மறு ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் வரை, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை, பெருநகர சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் உள்ள வாகன நிறுத்துமிடங்களில் எவ்விதக் கட்டணமுமின்றி நிறுத்திக் கொள்ளலாம்.
சென்னை மாநகராட்சியின் உத்தரவை மீறி வாகன நிறுத்த கட்டணம் வசூலித்தால் 1913 என்ற தொலைபேசி எண்ணில் பொதுமக்கள் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.