திருவள்ளூர் ரயில் நிலையம் அருகே தரம் புரண்டு விபத்துக்குள்ளான சரக்கு ரயில் கடந்த 5 மணிநேரமாக கொழுந்துவிட்டு எரிந்து வருகிறது. இவ்விபத்தில் உயிரிழப்புகள் ஏற்படாத நிலையில், மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
இது குறித்து ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பிரதாப், “திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தீப்பற்றி எரியும் நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. போக்குவரத்து தடைபடாமல் இருக்க, சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
மேலும், விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள ஆஸ்துமா நோயாளிகள், முதியவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் அருகே சரக்கு ரயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் உயிரிழப்பு இல்லை. பொதுமக்கள் யாரும் அச்சம் அடைய வேண்டாம். தீயை கட்டுக்குள் கொண்டுவர அனைத்து பணிகளும் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன” என தெரிவித்தார்.
தொடர்ந்து சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் நாசர், அப்பகுதிக்கு அருகிலுள்ள குடியிருப்பில் வீடு, வீடாக சென்று பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுமக்களை அறிவுறுத்தினார். மேலும், குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு உணவுகளையும் வழங்கினார்.
தீ விபத்தால் சுமார் 8 விரைவு ரயில்களின் சேவை தடைபட்டுள்ள நிலையில், சுமார் 30 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அரக்கோணம் மார்க்கத்தில் 10 பேருந்துகள், திருத்தணி மார்க்கத்தில் 10 பேருந்துகள், திருவள்ளூர் மார்க்கத்தில் 10 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.