திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் ரூ 2.20 கோடி மதிப்பிலான புதிய சி.டி.ஸ்கேன் கருவி மற்றும் ரூ 61.29 லட்சம் மதிப்பீட்டிலான டிஜிட்டல் எக்ஸ்ரே மற்றும் புளுரோஸ்கோப்பி கருவிகளை நோயாளிகள் பயன்பாட்டிற்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,”4 வருடத்திற்கு முன்பு 1000க்கும் மேற்பட்ட சுகாதாரத்துறை கட்டடங்கள் வாடகை கட்டடங்களில் செயல்பட்டு வந்தது. ஆனால் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு 1600 புதிய கட்டடங்கள் திறந்துவைக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல்லில் அரசு மருத்துவமனை தொடங்கப்பட்டு 3 ஆண்டுகள் ஆகிறது. 1218 பணியாளர்கள் உள்ளனர். இங்கு 23 சிறப்பு மருத்துவர்கள் உள்ளனர். தேவைக்கேற்ப மருத்துவர்கள் நியமிக்கப்படுவார்கள். வருங்காலங்களில் ஆஞ்சியோ மற்றும் இருதய அறுவை சிகிச்சை மையம் இங்கும் அமைக்கப்படும்.
தமிழ்நாட்டில் 2286 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளது. பல்வேறு இடங்களில் அதிநவீன வசதிகளுடன் செயல்படுகிறது. பழனியில் மாவட்ட அரசு மருத்துவமனை அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களில் 25 மாவட்ட அரசு மருத்துவமனைகள் அமைப்பதற்கான பணிகள் ரூ.1018 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.
ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலிப் பணியிடங்கள் அடுத்த ஆண்டு நிரப்பப்படும். அரசு மருத்துவமனைகளில் இன்னும் பத்து நாட்கள் கழித்து மருத்துவர் பணியிடம் அனைத்தும் 100% நிரப்பப்பட்டது என்று நீங்களே கூறுவீர்கள்” என தெரிவித்துள்ளார்.